ADDED : பிப் 02, 2026 05:12 AM

இன்றைய காலத்தில் மருந்து கடைகளை தேடினால், கிடைப்பது கஷ்டம். ஆனால் சிறிய கிராமங்களிலும், மதுபான கடைகள் உள்ளன. வீட்டின் ஆண்கள், குடிப்பழக்கத்துக்கு ஆளாகி, குடும்பம் பாழாவதை தடுக்க முடியாமல் பெண்கள் மனம் புழுங்குகின்றனர். ஆனால் பெண்கள் ஒன்று திரண்டு போராடினால், மதுபானத்தை ஒழிக்க முடியும் என்பதை, மார்ட்டள்ளி கிராமத்தின் பெண்கள் நிரூபித்துள்ளனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுாரு தாலுகாவில், மார்ட்டள்ளி கிராமம் உள்ளது. கிராமத்தில் இரண்டு மதுபான கடைகள் உள்ளன. இதன் விளைவாக ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகினர். இவற்றை அப்புறப்படுத்தும்படி பெண்கள், கிராம பஞ்சாயத்திடம் பல முறை மன்றாடினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கிராமத்தின் பள்ளி அருகிலேயே, மதுபான கடை இருப்பதால், மாணவர்களை ஈர்க்கிறது. குடிகாரர்கள் மதுபான பாக்கெட்டுகள் வாங்கி, கடை முன்பாகவே குடித்துவிட்டு சாலைகளிலேயே பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்களை வீசுகின்றனர். இதனால் இவ்வழியாக நடமாடும் பெண்கள், சிறார்கள் தர்ம சங்கடத்துக்கு ஆளாகின்றனர்.
பொறுமை இழந்த பெண்கள், போராட்டத்தை கையில் எடுத்தனர். மூன்று நாட்களுக்கு முன், பெண்கள் அணி திரண்டு, கிராமத்தில் பேரணி நடத்தினர். சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக குவிந்து, தர்ணா நடத்தினர். இவர்களின் போராட்டத்துக்கு, பஞ்சாயத்து பணிந்தது. மதுபான கடையை அப்புறப்படுத்த, நடவடிக்கை எடுத்துள்ளது.
சாம்ராஜ் மாவட்டம், எலந்துார் தாலுகாவின், டி.ஹோசூரு, சிவள்ளி கிராமங்களின் பெண்களின் முயற்சியால், மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேடமூட்லு கிராமத்தில், சட்டவிரோதமாக மதுபானம் விற்றால், ௧ லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
அன்னனூருகேரி கிராமத்தில், மதுபானம் விற்றால், சூதாடினால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கிறது. இதனால் மதுபான விற்பனை கட்டுக்குள் வந்துள்ளது.
- நமது நிருபர் -

