ADDED : மே 15, 2026 03:33 AM

- நமது நிருபர் -: ''கர்நாடகாவில், மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 10 ஆண்டுகளில் மகளிர் கிரிக்கெட்டில் பெரிய மாற்றங்கள் நடக்கும்,'' என, கே.எஸ்.சி.ஏ., நிர்வாகக் குழு உறுப்பினர் கல்பனா வெங்கடாச்சார் கூறி உள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
கே.எஸ்.சி.ஏ., எனும், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷனின் ஆறு மண்டலங்களிலும் பயிற்சி மையங்கள் துவங்க முடிவு செய்து உள்ளோம். இதன் மூலம், திறமையான வீரர் - வீராங்கனைகளை கண்டறிந்து, அவர்களின் திறன் மேம்படுத்தப்படும்.
ஆறு பயிற்சி மையங்களின் வீரர், வீராங்கனைகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டிகளின் மூலம், 25 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் பெங்களூருக்கு வரவழைக்கப்படுவர். அங்கு அவர்களுக்கு கூடுதல் பயிற்சி வழங்கப்படும்.
புறநகர் பகுதியில் உள்ள கிரிக்கெட் வீரர்களின் தேவைகளை, அசோசியேஷன் கண்டறிந்து உள்ளது. வரும் நாட்களில், இரு பாலருக்கும் சிறந்த பயிற்சி அளிக்கப்படும்.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறுமிகளுக்கான கிரிக்கெட் பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டு உள்ளன. இது, மகளிர் கிரிக்கெட்டில் நிச்சயம் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
காலம், வேகமாக மாறி கொண்டிருக்கிறது. கிரிக்கெட்டில் பெண்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர். அவர்கள் பல சவால்களையும் எதிர்கொள்கின்றனர். இந்த சவால்கள் அனைத்தையும் கடந்து, வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்.
மாநிலத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் மகளிர் கிரிக்கெட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இனிமேல், திறமையான வீராங்கனைகளை அடையாளம் காணும் பணி முழு வீச்சில் நடக்கும்.
கர்நாடகாவை சேர்ந்த அதிகமான வீராங்கனைகள், இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது. இதற்கான முயற்சியில் அசோசியேஷன் தீவிரமாக ஈடுபடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
