/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
தியாகிகளுக்காக நேரத்தை தியாகம் செய்யும் ஓவியர்
/
தியாகிகளுக்காக நேரத்தை தியாகம் செய்யும் ஓவியர்
ADDED : பிப் 01, 2026 05:06 AM

ஹாவேரி ராணிபென்னூர் தாலுகாவில் உள்ளது கோடியாலா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஓவியர் ஜி.ஜே.மெஹந்தேல், 63. இவர் கண்ணால் பார்ப்பதை தத்ரூபமாக ஓவியமாக வரையும் திறமையுடயைவர். இவர் ஓவியம் வரைவதில் ஏற்கனவே பல சாதனை படைத்து உள்ளவர். இதற்காக, விருதுகளும் வாங்கி வீட்டில் அடுக்கி இருக்கிறார். தேசபக்தி அதிகம் உடையவர்.
இவர், கடந்த ஆண்டு ஒரு சபதம் எடுத்தார். அதாவது, ஒவ்வொரு நாளும் ஒரு சுதந்திர போராட்ட வீரரின் படத்தை ஓவியமாக வரைய முடிவு செய்தார். அப்படி, கடந்த ஆண்டின் 365 நாட்களிலும், தினமும் ஒரு படம் வரைந்து அசத்தி உள்ளார். இவை அனைத்தையும் வரிசைப்படுத்தினார். ஒரு படத்தை வரைவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஆகி உள்ளது.
இப்படி, ஒவ்வொரு நாளும் தனது அன்றாட வேலைகளை முடித்த பின், ஓவியம் வரைந்து உள்ளார். இந்த ஓவியங்களை குடியரசு தினத்தன்று மக்கள் பார்வைக்கு வைத்தார். மேலும், கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு முன், ஒரு கல்வெட்டு வைத்து, அதில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டு உள்ளார். இந்த கல்வெட்டு இளம் தலைமுறையினருக்கு தேச பக்தியையும் ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்.
இதுகுறித்து, ஓவியர் மெஹந்தேல் கூறியதாவது:
கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வருபவர்களிடம், தேச பக்தியை வளர்க்க முயற்சி மேற்கொண்டு உள்ளேன்.
நமது நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களின் பெயர்கள் இன்றைய இளைஞர்கள் மனதில் நீங்காமல் இருக்க வேண்டும். ஓவியம் என்பது கலை. அந்தக் கலையை வைத்து என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன்.
நாட்டுக்காக உயிரை கொடுத்தவர்களுக்கு நாமும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக, படங்களை வரைந்தேன். சிரமம் தான்...ஆனாலும் செய்து முடித்தேன். அதுதான் எனக்கு பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -:

