ADDED : பிப் 01, 2026 05:03 AM

ராய்ச்சூர் மாவட்டம், வரலாறு, கலை, கலாசாரத்துக்கு பெயர் பெற்றது. இந்த மாவட்டத்தில் பல ஆண்டுகளாக, 'மாவட்ட உற்சவம்' நடக்கவில்லை. அதனால், மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த, 29 முதல், 31ம் தேதி வரை மாவட்ட உற்சவத்திற்கு, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
உற்சவத்தை முன்னிட்டு, ராய்ச்சூர் நகர் முழுவதும் சுவர்களில், கலைஞர்கள் தங்களின் கைவண்ணங்களை காட்டியிருந்தனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற ராய்ச்சூர் கோட்டை, தீன் கந்தில், கல் யானை, சக்தி நகர் ஆர்.டி.பி.எஸ்., அனல் மின் உற்பத்தி நிலையம், இந்திய ரயில்வே, நெற் வயல், பீதர் கோட்டை, பாதாமி ஐஹொளே, விளையாட்டு வீரர்கள் உட்பட, பல்வேறு ஓவியங்களால் ராய்ச்சூர் நகர் அழகு பெற்றிருந்தது.
இதற்காக, 20 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
துாசியுடனும், ஆங்காங்கே குட்கா கரையுடனும் அசுத்தமாக தென்பட்ட சுவர்கள், இப்போது அழகான ஓவியங்களுடன் காட்சியளிக்கின்றன. இவைகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
சுற்றுச்சூழல் ஆர்வலர் சையத் ஹபிஜுல்லா கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு பின், ராய்ச்சூரில் மாவட்ட உற்சவம் நடத்தவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இது, மாவட்டத்துக்கு பெருமையான விஷயமாகும். உற்சவத்தை முன்னிட்டு, பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தது வரவேற்கத்தக்கது.
உற்சவத்தை முன்னிட்டு, ராய்ச்சூரின் பல இடங்களில், சுவர்களில் பறவைகள், ராய்ச்சூர் கோட்டை, விளையாட்டு வீரர்கள் என, பல விதமான ஓவியங்கள் வரைந்து சுவர்களை அழகாக்கியது நல்ல விஷயம்.
மாவட்ட உற்சவம் மட்டுமில்லாமல், மற்ற நாட்களிலும் சுவர்களை, இது போன்று அழகாக்கினால் சிறப்பாக இருக்கும்.
சுற்றுச்சூழலும் அழகாகும். சிறார்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். ஓவிய கலைஞர்களுக்கும்வேலை வாய்ப்பு கிடைக்கும். சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டி அசுத்தமாக்குவதையும் தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

