/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
காளான் வளர்ப்பால் தொழில் முனைவோரான பீமப்பா
/
காளான் வளர்ப்பால் தொழில் முனைவோரான பீமப்பா
ADDED : பிப் 22, 2026 05:20 AM

- நமது நிருபர் -
இன்றைய இளம் பட்டதாரிகள், தங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றாலும், விவசாயம், சிறு தொழில்கள் மூலம் தொழில் முனைவோராக மாற ஆரம்பித்து உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் பீமப்பா, 25. கொப்பால் தாலுகா பசபுரா கிராமத்தை சேர்ந்த பட்டதாரியான இவர், காளான் வளர்ப்பு மூலம் தொழில் முனைவோராக மாறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய, மாநில அரசுகளின் தோட்ட கலைத்துறை இணைந்து, கொப்பாலில் விவசாயம் தொடர்பான கண்காட்சியை நடத்தின. இந்த கண்காட்சியில் காளான் வளர்ப்பு குறித்தும், அதில் கிடைக்கும் லாபம் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. உத்தர கன்னடா, தட்சிண கன்னடா மாவட்டங்களில் தான் அதிக காளான் வளர்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளிலும் வளர்க்கலாம் என்பது பற்றி, எனக்கு தெளிவான செய்தி கிடைத்தது.
பி.காம்., பட்டதாரியான எனக்கு வேலை கிடைப்பதிலும் சிரமம் இருந்தது. இதனால், நான்கு ஆண்டுகளுக்கு முன் அரை ஏக்கர் நிலத்தில், காளான் சாகுபடி செய்யத் துவங்கினேன். மாவட்ட தோட்ட கலைத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு, ஊக்குவிப்பின் மூலம் காளான் வளர்ப்பது எப்படி என்றும் கற்றுக் கொண்டேன்.
தற்போது, எனது நிலத்தில் விளையும் சிப்பி காளானை கிலோ, 300 ரூபாய்க்கும், பால் காளானை கிலோ, 400 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன். வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம், சாம்பல் நிறங்களில் சிப்பி காளான்களை வளர்க்கலாம். நான் சாம்பல் நிற காளான்களை வளர்க்கிறேன். கொப்பால் மாவட்டத்தில் நடக்கும் திருவிழா, கண்காட்சிகளில் கடை அமைத்து காளான்களை விற்பனை செய்கிறேன். வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கி ஆர்டர்களை பெற்று அதன் மூலமும் விற்பனை செய்கிறேன். தற்போது மாதத்திற்கு 70,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. காளான் வளர்ப்பு என்னை தொழில் முனைவோராக மாற்றி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

