ADDED : ஏப் 06, 2025 07:45 AM

சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனமும், தியாக சிந்தனையும் இருந்தால், எந்த வழியிலும் சேவை செய்து, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கலாம் என்பதற்கு உதாரணமாக பலர் வாழ்கின்றனர். இவர்களில் ராமண்ணா, ஸ்ருதி தம்பதியும் சேர்ந்துள்ளனர்.
பொதுவாக திருமணமாகி, பல ஆண்டுகள் குழந்தை பிறக்காவிட்டால், ஆதரவற்றோர் மையங்களில் இருந்தோ, உறவினர்களின் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பர் அல்லது குழந்தையே இல்லாமல், வாழ்ந்து முடிப்போரும் உண்டு. ஆனால் ராமண்ணா, ஸ்ருதி மாறுபட்டவர்கள்.
டாக்டர்கள்
ராய்ச்சூர் மாவட்டம், மஸ்கி தாலுகாவை சேர்ந்தவர் ராமண்ணா, 40. இவர் மஸ்கியில் உள்ள கல்லுாரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஸ்ருதி, 35, கம்ப்யூட்டர் ஆசிரியையாக பணியாற்றுகிறார். வசதிக்கு எந்த குறைவும் இல்லை. ஆனால் இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்தும், குழந்தை பிறக்கவில்லை. பல டாக்டர்களை சந்தித்து, சிகிச்சை பெற்றனர்.
கோவில், கோவிலாக ஏறி இறங்கினர். வேண்டுதல் வைத்தும் பலன் கிடைக்கவில்லை. இதனால் தம்பதி மனம் நொந்திருந்தனர். இந்த வருத்தத்தில் இருந்து, விரைவில் விடுபட்டனர்.
தங்களுக்கு குழந்தை இல்லை என்ற கவலையை மறந்தனர். சுற்றுப்புறத்தில் வசிக்கும் ஏழை குழந்தைகளை தங்கள் குழந்தைகளாக கருதி அன்பு காட்டி, அரவணைக்க துவங்கினர்.
ராய்ச்சூர் மாவட்டம், கல்வியில் பின் தங்கிய மாவட்டமாகும். எனவே இங்குள்ள ஏழை சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற சிறார்களுக்கு இலவச கல்வி அளிக்க முடிவு செய்தனர். இவர்களுக்காக மறுவாழ்வு மையம் திறந்து, இலவசமாக உணவு, தங்கும் வசதி செய்து கொடுத்து, கல்வி அளிக்கின்றனர். தற்போது 30க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு, அடைக்கலம் அளித்துள்ளனர். விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
கிரிக்கெட் பயிற்சி
விபத்து ஒன்றில், கால் இழந்த சிறுவனுக்கு கபடி, கிரிக்கெட் பயிற்சி அளிக்கின்றனர். சிறுவன் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பாடங்களுடன், தினமும் குரு வந்தனம், சுலோகங்கள், பசவண்ணரின் அறிவுரைகள் கற்றுத் தருகின்றனர். தம்பதி தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை, இந்த சிறார்களுக்காக செலவிடுகின்றனர். ஏழை சிறார்களுக்கு தம்பதியின் வீடு, எப்போதும் திறந்திருக்கிறது.
இவர்களின் மறுவாழ்வு மையத்தில், சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கல்வி ஆர்வலர்கள் தம்பதியுடன் கைகோர்த்தால், சிறார்களுக்கு உதவியாக இருக்கும்.
குழந்தை இல்லை என, நினைத்து மனம் வருத்தத்திலேயே காலம் கடத்தாமல், ஆதரவற்ற சிறார்களை தங்களின் குழந்தைகளாக கருதி, அவர்களுக்கு வாழ்வளிக்கும் ராமண்ணா - ஸ்ருதி தம்பதியின் சேவை, அனைவருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
-நமது நிருபர் -

