/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
மலைப்பகுதியை துாய்மைப்படுத்தும்
/
மலைப்பகுதியை துாய்மைப்படுத்தும்
ADDED : பிப் 15, 2026 06:25 AM

- நமது நிருபர் -: மலைப்பகுதிகளில் சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, மலையில் வாழும் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும், பிளாஸ்டிக் பொருட்களை வன விலங்குகள் உண்பது, அவற்றின் உடலுக்கு தீங்கு ஏற்படுத்துகிறது. இருப்பினும், சிலர் இதை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
இவர்கள் குப்பையை வீசி செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையை தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். இந்த அரிய பணியை அறப்பணியாக செய்து வருவோர், சிக்கமகளூரை சேர்ந்த, 'ரூட்ஸ்' குழுவினர்.
இவர்கள் சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் மலையேற்ற பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர்.
விழிப்புணர்வு
குறுகிய நேரத்தில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். இதுதொடர்பாக வனப்பகுதிகளில் அறிவிப்பு பலகைகளையும் வைத்துள்ளனர். இவர்கள் ஹாசன் மாவட்டம் பேலுாரில் இருந்து தர்மஸ்தலா வரை உள்ள வனப்பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகளை நிறுவி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, இப்பகுதிகளில் கிடக்கும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்துகின்றனர். கடந்த சில நாட்களாக கடுமையான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் என, பாராமல் உழைக்கின்றனர்.
இந்த குழுவின் முக்கிய உறுப்பினர்களான ரஞ்சித், பிரவீன், சச்சின், விஷால் ஆகியோர் முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
மலையேறுபவர்களிடம் தண்ணீர் பாட்டீல், பிளாஸ்டிக் பைகளை வீசிவிட்டு செல்லக்கூடாது என்று எடுத்துரைக்கிறோம். நாங்களும் மலைப்பகுதியில் உள்ள குப்பையை சேகரித்து வருகிறோம். இதை பார்த்த பலரும் எங்களை பாராட்டுகின்றனர். நாங்களும் குப்பையை நிச்சயம் வீசமாட்டோம் என்று உறுதியளிக்கின்றனர்.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்க ள் அதிக எண்ணிக்கையில் மலைமேல் அமைந்துள்ள கோவில்களுக்கு வருகை தருகின்றனர். இவர்களில் சிலர் குப்பையை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், சிக்கமகளூரு மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள மலைகளிலும் எங்கள் பணி தீவிரமாக நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

