/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
டாக்டர் தம்பதியின் அருமையான சேவை
/
டாக்டர் தம்பதியின் அருமையான சேவை
ADDED : ஜன 11, 2026 05:41 AM

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கிராமத்தில் யாராவது இறந்தால், அவர்களின் மரணம் குறித்து ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிப்பர். இப்போது சமூக வலைதளங்களில் இறந்தவர்களின் புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் செய்தி தெரிவிக்கின்றனர். ஆனால், சமூக ஊடகங்களை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு, தங்களுக்கு வேண்டியவர்கள் இறந்து விட்டால் கூட தகவல் தெரிவதில்லை. இந்தக் குறையை போக்கும் வகையில், பெலகாவியை சேர்ந்த தம்பதி, சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வருகின்றனர்.
பெலகாவி பைலஹொங்கலா நகரில் வசிப்பவர் மஹாந்தேஷ், 55. இவரது மனைவி சுரேகா, 50. டாக்டரான இவர்கள் இருவரும், தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் மூன்று ஒலி பெருக்கிகளை வைத்து, பைலஹொங்கலாவில் யாராவது இறந்து விட்டால் அறிவிப்பு வெளியிடுகின்றனர்.
இதுகுறித்து டாக்டர் தம்பதி கூறியதாவது:
மரணம் இயற்கையானது. சிலர் அதை கெட்ட விஷயமாக நினைத்து, இறந்தவர்கள் வீட்டிற்கு செல்வதில்லை. மரண பயம் நல்லதல்ல என்ற செய்தியை பரப்புவதற்காக, எங்கள் வீட்டின் மொட்டை மாடியில் ஒலி பெருக்கி வைத்து யாராவது இறந்து விட்டால், நாங்கள் அறிவிப்பு வெளியிடுகிறோம். ஒலிபெருக்கி மூலம் அறிவித்தால் பலருக்கு விஷயம் சென்றடையும்.
நாங்கள் அறிவிப்பு வெளியிடும் முன், ஓம் நமச்சிவாயா என்று துவங்கி, இறந்தவரின் முழு பெயர், வயது, வசிக்கும் இடம், இறுதிச்சடங்கு எப்போது நடக்கிறது என்பது பற்றி கூறுகிறோம். 2017ம் ஆண்டிலிருந்து இப்படி செய்து வருகிறோம். ஆரம்பத்தில் பாப்பண்ணா என்ற நபர் ஒலிபெருக்கி மூலம் தகவல் கொடுக்கும் பணியை செய்தார். தற்போது அவர் வேறு ஊருக்கு சென்று விட்டதால், நாங்களே செய்து வருகிறோம்.
நாங்கள் பணியில் இருக்கும் போது, யாராவது இறந்ததாக தகவல் வந்தால் உடனடியாக வீட்டிற்கு வந்து அறிவிப்பு கொடுக்கிறோம். ஜாதி, மதம் பார்த்து நாங்கள் அறிவிப்பு வெளியிடுவதில்லை.
ஐந்து வாட்ஸாப் குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறோம். அந்தக் குழுவில் யாராவது இறந்ததாக தகவல் பதிவிட்டால், அதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம். இதுவரை 3,000 பேர் இறந்ததை ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளோம் . இந்த சேவை மனதிற்கு திருப்தி அளி க்கும் வகையில் உள்ளது. இந்தப் பணியை தொடர்ந்து செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் - -

