ADDED : ஆக 01, 2026 11:03 PM

- நமது நிருபர் -
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்தவர் பரத்குமார், 34. இவர், தனது இளமை பருவத்தில் தடகள வீரராக திகழ்ந்தார். பின், குடும்பத்தை காப்பாற்ற மீன்பிடி தொழிலில் ஈடுபட்டார். 2019 முதல், 2025ம் ஆண்டு வரை மீன்பிடித்து வந்தார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்ப செலவுகளை பார்த்துக் கொண்டார். அதில் கிடைத்த பணத்தை சேமித்தும் வந்தார்.
இவருக்கு எப்படியாவது ஒரு தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், என்ன தொழில் செய்வதென்று முடிவெடுக்க முடியாமல் திணறினர். அப்போது, 'நாம் ஏன் மீன் பிடி சம்பந்தமான தொழிலை தொடங்கக்கூடாது' என நினைத்தார்.
இதன் விளைவாக, அவர் தனது வீட்டின் மொட்டை மாடியில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், நண்டு வளர்க்க துவங்கினார். துவக்கத்தில் சில சிரமங்களை சந்தித்தார். நாட்கள் செல்லச்செல்ல நண்டு வளர்ப்பில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். பெரிய நண்டுகளை தனித்தனி பெட்டிகளில் வளர்த்து வருகிறார். இதனால், இரண்டு நண்டுகள் சண்டையிட்டு, கொடுக்கை இழக்கும் அபாயத்தை தவிர்க்க முடிந்தது.
நண்டுகளை விலைக்கு விற்கும்போது, அவற்றின் கொடுக்குகளுக்கு மதிப்பு அதிகம் என்பதால், கொடுக்கை நண்டுகள் இழக்காமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்தினார்.
இப்போது, அவரது வீட்டில், 240க்கும் மேற்பட்ட பெட்டிகள் உள்ளன. அவற்றில் நண்டுகளை வளர்க்கிறார். வாரத்திற்கு 50 முதல், 60 கிலோ நண்டுகளை ஹோட்டல்கள், உள்ளூர் வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறார்.
அந்த வகையில், மாதம், 75,000 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகிறார். சுயநலமின்றி நண்டு வளர்ப்பு தொழிலை கற்க விரும்புவர்களுக்கு கற்றும் கொடுக்கிறார்.
இது குறித்து, அவர் கூறுகையில், ''மிக குறைந்த இடத்தில் அதிக லாபம் ஈட்டி வருகிறேன். இதற்கு நண்டு வளர்ப்பே முக்கிய காரணம். எந்த தொழிலாக இருந்தாலும் சரியான அறிவை பெற்ற பின், தொழில் துவங்கினால் நிச்சயமாக வெற்றி பெறலாம்,'' என்றார்.
