/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
ஹைடெக் தொழில் நுட்பத்தில் வளையல் தொழிற்சாலை
/
ஹைடெக் தொழில் நுட்பத்தில் வளையல் தொழிற்சாலை
ADDED : பிப் 08, 2026 05:21 AM

- நமது நிருபர் -
பெண்கள் தங்களின் கைகளில் வளையல் அணிவது கலாசாரம். பச்சை நிற கண்ணாடி வளையல் அணிவது, இந்திய பெண்களின் பாரம்பரியமாகும். தற்போது பேன்சி வளையல்கள் வந்த பின், கண்ணாடி வளையல்களின் உற்பத்தி குறைந்துள்ளது. பாரம்பரிய கண்ணாடி வளையல்களுக்கு புதுப்பொலிவு கொடுக்க, பெலகாவியில் தொழிற்சாலை தயாராகிறது.
பெலகாவி மாவட்டம் பைலஹொங்களா தாலுகா, முரகோடா கிராமம் அருகே, காஜகாரா வம்சத்தினர், 40 ஆண்டுகளாக, விறகு அடுப்பு பயன்படுத்தி கண்ணாடி வளையல் தயாரித்து வந்தனர்.
தற்போது விறகுகளுக்கு பற்றாக்குறை, தயாரிப்பு செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், கண்ணாடி வளையல் தொழில் பாதித்துள்ளது.
கண்ணாடி வளையல்களுக்கு புதுப்பொலிவு கொடுக்கும் நோக்கில், முரகோடா அருகே, நவீன வளையல் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் தொண்டு அமைப்பின் உதவியுடன், தொழிலாளர்களே ஒன்று சேர்ந்து 9.95 கோடி ரூபாய் செலவில், வளையல் தயாரிப்பு தொழிற்சாலை கட்ட திட்டமிட்டு உள்ளனர்.
இதற்காக மாநில அரசே ஒப்பந்த அடிப்படையில் முரகோடா அருகே ஐந்து ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளது; திட்டப்பணிகளுக்கான செலவில், 15 சதவீதம் தொகையையும் அரசு தருகிறது.
அரசின் ஊக்கம், தொழிலாளர்களின் ஆர்வத்தால், விரைவில் முரகோடா அருகே அதிநவீன வளையல் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இது, நாட்டில் இரண்டாவதாகவும், தென்னகத்தின் முதல் வளையல் தொழிற்சாலையாகவும் இருக்கும். உத்தர பிரதேசத்தின் பிரோஜாபாத்தில் முதல் தொழிற்சாலை உள்ளது. முரகோடாவில் தொழிற்சாலை செயல்பட்டால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பெலகாவி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.
முரகோடா கண்ணாடி வளையல் மிகவும் பிரபலமானது. தற்போது இங்கு, 30 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில், 400 பேர் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தினமும் 18,000 வளையல்கள் தயாரிக்கின்றனர். அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆண்டுக்கு, 5.50 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கிறது.
திருமணங்கள், சுப நிகழ்ச்சிகள், வழிபாடுகளுக்கு பச்சை நிற வளையல்கள் தேவை. மஹாராஷ்டிரா, மும்பை, புனே, கொல்லாபூர், மீரஜ், சாங்க்லி, சதாரா, தாவணகெரே, ஹாவேரி, ஹூப்பள்ளி, தார்வாட், கதக், ராணிபென்னூர், கொப்பால், பாகல்கோட், கலபுரகி, பீதர் உட்பட, பல நகரங்களுக்கு முரகோடாவில் இருந்து வளையல் சப்ளை செய்யப்படுகிறது.
பல தலைமுறைகள் இது தொடர்பாக தொண்டு அமைப்பின் இயக்குனர் மஞ்சுநாத் காஜகாரா கூறியதாவது:
வளையல் தயாரிப்பது, நாங்கள் தலைமுறை தலைமுறையாக செய்து வரும் குலத்தொழில். இதை ஹைடெக் தொழில்நுட்பத்தில் தயாரிக்கும் நோ க்கில், 2018ல் நாங்கள் பிரோ ஜாபாத்துக்கு சென்றிருந் தோம். அங்கு எந்த வகையில் வளையல் தயாரிக்கின்றனர் என்பதை தெரிந்து கொண்டோம். அதேபோன்று முரகோடாவில் தொழிற்சாலை திறக்க, திட்டம் வகுத்துள்ளோம்.
இது தொடர்பாக, பைலஹொங்களா எம்.எல்.ஏ., மஹாந்தேஷ் கவுஜலகியிடம் வேண்டுகோள் விடுத்தோம். அவரும் அரசிடம் எங்களின் வேண்டுகோளை தெரிவித்து அனுமதி பெற்று தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விறகு தீயில் வளையல் தயாரிப்பதை விட, காஸ் பயன்படுத்தி வளையல் தயாரிப்பது எளிது. ஒரே அளவில் தீ எரியும் என்பதால், வளையலுக்கு அழகான வடிவம் கிடைக்கும்.
தொழிற்சாலை செயல்பட துவங்கினால், அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பாரம்பரியமான கண்ணாடி வளையல்களை தரம் உயர்த்தி, அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வது, எங்கள் குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்,

