/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை உருவாக்கிய பிரதீக்
/
மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை உருவாக்கிய பிரதீக்
மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை உருவாக்கிய பிரதீக்
மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை உருவாக்கிய பிரதீக்
ADDED : பிப் 22, 2026 05:19 AM

- நமது நிருபர் -
விதி நம் வாழ்க்கையை முடக்கும் போது, அந்த விதியையே போராடி வெற்றி பெற்றவர்கள் ஏராளம். அதில் ஒருவர் தான் பிரதீக் கண்டேல்வல், 34.
பெங்களூரை சேர்ந்த இவர், தகவல் தொழில்நுட்ப பொறியாளர். இளம் வயதிலேயே இத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அப்போது, 2014ல் கட்டுமான கட்டடத்தில் இருந்து தவறி விழுந்தார். மருத்துவமனையில் சேர்த்து அவரின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இடுப்புக்கு கீழ் கால்கள் செயல் இழந்து விட்டது. பல மாதங்கள் படுக்கையில் இருந்த அவர், உடல் நலம் தேறினார்.
விதி தன் வாழ்க்கையை முடக்கி விட்டது என்று எண்ணாமல், அந்த விதியையே போராடி வெற்றி பெற முடிவு செய்தார். தனக்காக வருந்துவோரை எண்ணி கவலைப்படவில்லை. மாறாக, இந்த ஊனத்தையே தனது வெற்றி பாதையாக மாற்றினார். இனி சக்கர நாற்காலி தான் நம் வாழ்க்கை என்பதை ஏற்றுக் கொண்டு, அனைத்து இடங்களிலும் சந்தோஷமாக சென்று வந்தார். ஆனாலும், ஒரு சில நேரங்களில் அவருக்கு நெருடல் ஏற்பட்டது.
உணவகங்கள், ரயில் நிலையங்கள் என சாதாரண மக்களுக்கு வசதியாக படிக்கட்டுகள், உள்ளன. ஆனால், சக்கர நாற்காலியில் செல்லும் தன்னை போன்றோருக்கு சுலபமாக படிக்கட்டுகளில் ஏற முடியவில்லையே என்று எண்ணினார். அந்த எண்ணத்திற்கு விடையும் பெற்றார்.
தன்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கென 'சரிவுப்பாதை' அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். தன் எண்ணத்தை தனது பெற்றோர், நண்பர்களிடம் கூறினார். அவரின் எண்ணத்தை அனைவரும் பாராட்டினர்.
கடந்த 2018ல் 'ரேம்ப் மை சிட்டி' என்ற பெயரில் நிறுவனம் நிறுவினார். இதன் மூலம் உணவகங்கள், மால்கள், போலீஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் செல்லும் இடங்களில் சாய்வுப்பாதை அமைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கென தனி வழி ஏற்படுத்தினார்.
இது குறித்து பிரதீக் சகோதரர் நிர்பிக் கூறியதாவது:
மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த போது, அவர் உயிர் பிழைப்பது அபூர்வம் என நம்பப்பட்டது. அப்போது பிரதீக், டாக்டரிடம், 'இரண்டு ஆண்டுகள் முழுமையாக குணமடைந்து உ ங்கள் முன் வருவேன். என் வாழ்க்கை இத்துடன் முடிவடையவில்லை' என்றார்.
அப்போதில் இருந்து தினமும் 8 முதல் 10 மணி நேரம் பிசியோதெரபிஸ்டிடம் பயிற்சி பெற்றார். 2017 ல் 'வாக்கர்' வைத்து கொண்டு நடந்தார்; உணவு சமைக்க துவங்கினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதீக் கூறியதாவது:
சாய்வுப்பாதைக்கு சிமென்டோ, செங்கற்களோ பயன்படுத்தாமல், இரும்பு, அலுமினியத்தில் செய்யப்பட்ட சாய்வுப்பாதை அமைக்க முடிவு செய்தேன்.
இதனை எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று பொருத்தி கொள்ளும் வகையில் வடிவமைத்தேன். இதை வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
ஆரம்பத்தில் உணவகங்களுக்கு தான் இத்தகைய சாய்வு பாதை அமைக்க தீர்மானித்தேன். ஏனெனில், இங்கு தான் அதிகளவிலான மக்கள் தினமும் செல்கின்றனர். இந்நிறுவனம் ஆரம்பத்தில் குறுகிய காலத்தில், பெங்களூரில் 60க்கும் மேற்பட்ட உணவகங்களில் இதனை பயன்படுத்த துவங்கினர்.
அதுதவிர, வங்கிகள், பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்தும் எங்களுக்கு பல ஆர்டர்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
பெங்களூரில் 70 ஆரம்ப சுகாதார மையங்களில் இந்த சாய்வுப்பாதை அமைத்து உள்ளோம்.
சர்ச் தெருவில், 100க்கும் மேற்பட்ட உணவகங்கள், 50க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்கள், மால்கள், ஏ.டி.எம்.,கள் அமைத்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது இவரின் நிறுவனம் டில்லி, கோவா, மும்பை ஆகிய நகரங்களுக்கும் விரிவடைந்து உள்ளது. இவரின் செயலை பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருது வழங்கி கவுரவித்து உள்ளது. கடந்த 2024 ல் சிறந்த ரோல் மாடலுக்கான தேசிய விருதை, ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

