/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
மைசூரில் நாட்டின் முதல் பூனை அருங்காட்சியகம்!
/
மைசூரில் நாட்டின் முதல் பூனை அருங்காட்சியகம்!
ADDED : ஜன 25, 2026 05:22 AM

- -நமது நிருபர்- -
மைசூரு என்றாலே, நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அரண்மனை. மைசூருக்கு சுற்றுலா செல்வோர் முதலில் அரண்மனையை சுற்றிப் பார்த்ததும், சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில், ஸ்ரீ சாமராஜேந்திரா வன உயிரியல் பூங்கா, கே.ஆர்.எஸ்., அணைக்கு செல்வர்.
மைசூரில் உள்ள சுற்றுலா தளங்கள் பட்டியலில், தற்போது பூனை அருங்காட்சியகமும் இணைந்துள்ளது. இது, இந்தியாவின் முதல் பூனைகளுக்கான அருங்காட்சியகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அருங்காட்சியத்தின் உரிமையாளர் சரத் கூறியதாவது:
பூனைகள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில் ஒன்று. பண்டைய காலத்தில் இருந்து பூனைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே நிலையான ஒரு பந்தம் உள்ளது. நானும் சிறு வயதில் இருந்து பூனை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறேன்.
பூனைகளுக்காகவே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. வேறு எங்காவது அருங்காட்சியகம் உள்ளதா என்று ஆய்வு செய்த போது இல்லை என, தெரியவந்தது.
தற்போது மைசூர் நகரில் இருந்து நஞ்சன்கூடு செல்லும் சாலையில், மது வனத்திற்கு முன் அருங்காட்சியகம் திறந்து உள்ளேன். உலகம் முழுதும் எத்தனை பூனை இனங்கள் உள்ளன என்பது பற்றி, மைசூரு வரும் சுற்றுலா பயணியர், பள்ளி மாணவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே, இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இங்கு, 20க்கும் மேற்பட்ட பூனைகள் உள்ளன. அதில், எட்டு பூனைகள் இந்தியாவின் பல்வேறு இனத்தை சேர்ந்தவை.
இங்கு பராமரிக்கப்படும் பூனைகளுக்கு காலையில் முதலில் சுத்தமான தண்ணீரை குடிக்க வைப்போம். பின் உலர்ந்த உணவுகள் வழங்கப்படுகின்றன. சாப்பிட்டு முடித்த பின் அருங்காட்சியக கட்டடம் முழுவதும் சுற்றி வருகின்றன.
குளிர் நேரத்தில் வெளியே வந்து, வெயில் அடிக்கும் போது உள்ளே செல்கின்றன. தினமும், 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை நன்கு தூங்குகின்றன. பெரும்பாலும் பூனைகள் சுத்தமான காற்றை சுவாசிக்கவும், வெளிச்சமான பகுதியில் வசிக்கவும் அதிகம் ஆசைப்படுகின்றன.
பூனைகளின் ஆயுள் காலம், 12 வயது முதல் 18 வயது வரை மட்டுமே. தேவையான நேரத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும். இங்கு வளர்க்கும் பூனைகளை நான் விற்பனை செய்ய நினைக்கவில்லை. பூனைகளை பற்றிய தகவல்களை வழங்க மட்டுமே நினைக்கிறேன். பூனைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாக உள்ளது. தினமும் காலை, 10:00 முதல் இரவு 8:30 மணி வரை அருங்காட்சியகம் திறந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

