/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
விவசாயிக்கு பெயர் வாங்கி கொடுத்த நாவல் பழம்
/
விவசாயிக்கு பெயர் வாங்கி கொடுத்த நாவல் பழம்
ADDED : ஜூன் 28, 2025 11:12 PM

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா சன்னராயதுர்கா அருகே அஜ்ஜிஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் குமார், 51. விவசாயி. இவர், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டின் முன்பு, நாவல் பழம் மரத்தை நட்ட வைத்து வளர்க்க ஆரம்பித்தார். மூன்று ஆண்டுகள் கழித்து மரம் வளர்ந்து, நாவல் பழம் காய்க்க ஆரம்பித்தது.
பொதுவாக நாவல் மரத்தில் ஆண்டுக்கு ஒரு முறை தான் அதிக பழம் பழுக்கும். ஆனால் குமார் வீட்டின் முன்பு வளர்த்த மரத்தில், ஆண்டிற்கு 5 முறை நாவல் பழம் பழுக்க ஆரம்பித்தது. இதுபற்றி அறிந்த பெங்களூரு ஹெசருகட்டாவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி அனுராதா, அவரது குழுவினர் குமார் வளர்க்கும் நாவல் மரத்தை பார்வையிட்டனர். பழங்களை பறித்து ஆய்வு செய்தனர். வழக்கமாக இருக்கும் சுவையை விட, இந்த மரத்தின் பழத்தின் சுவை கொஞ்சம் கூடுதலாக இருந்தது.
இதுபற்றி மத்திய அரசின் தோட்டக்கலை துறைக்கு உட்பட்ட தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் ஆணையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த ஆணையத்தினரும் பழங்களை சாப்பிட்டு பார்த்து, குமாரை கடந்த ஜனவரி மாதம் டில்லிக்கு வரவழைத்து பாராட்டினர். 'சிறந்த விவசாயி' என்ற பாராட்டு சான்றிதழும் கொடுத்தனர்.
இதுகுறித்து குமார் கூறியதாவது:
கோடை காலத்தில் நாவல் பழம் விற்பனை ஜோராக நடப்பதை பார்த்து உள்ளேன். இதனால் 16 ஆண்டுக்கு முன்பு, வீட்டின் முன்பு நாவல் மரத்தை நட்டேன். இயற்கை உரங்களை பயன்படுத்தி மரம் வளர்த்தேன். மரம் வளர்ந்ததும் அதில் இருந்து கிடைத்த நாவல் பழத்தை விற்பனை செய்தேன். என்னிடம் பழம் வாங்கி சாப்பிட்டவர்கள் சுவை நன்றாக உள்ளது என்று கூறுவர். நான் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
ஹெசருகட்டாவில் இருந்து இந்திய தோட்டக்கலை துறையினர் வந்து, நாவல் மரத்தை ஆய்வு செய்த போது தான், மரத்தில் வளரும் நாவல் பழம் மகிமை எனக்கே தெரிந்தது. சிறந்த விவசாயி என்ற பெயரையும் நாவல் பழம் வாங்கி கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. எனது பெயர் வாங்கி கொடுத்த, நாவல் மரத்தை இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி வளர்ப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்
-நமது நிருபர்- .