/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
குப்பைகளால் துர்நாற்றம் வீசிய கிராமத்தை மாற்றி அமைத்த பல்கலை மாணவர்கள்
/
குப்பைகளால் துர்நாற்றம் வீசிய கிராமத்தை மாற்றி அமைத்த பல்கலை மாணவர்கள்
குப்பைகளால் துர்நாற்றம் வீசிய கிராமத்தை மாற்றி அமைத்த பல்கலை மாணவர்கள்
குப்பைகளால் துர்நாற்றம் வீசிய கிராமத்தை மாற்றி அமைத்த பல்கலை மாணவர்கள்
ADDED : மார் 01, 2026 05:00 AM

- நமது நிருபர் -
பெங்களூரு ஆனேக்கல் தாலுகாவில் உள்ளது பிலாபுரா கிராமம். இந்த கிராமத்தில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு சில ஆண்டுகளாக குப்பை பிரச்னை இருந்து வந்தது. அத்துடன், அருகேயுள்ள நகரில் இருந்து எடுத்து வரப்படும் குப்பையும் கொட்டப்பட்டது. இதனால், ஏரி, நிலம் அதிகளவு மாசுபட்டது. கிராமத்தினரும் துர்நாற்றத்திற்கு இடையே வாழ்க்கையை நடத்தி வந்தனர். மேலும், கிராமம் முழுதும் குப்பையால் சூழப்பட்டு வாழ தகுதியற்றதாகவும் மாறியது.
இதை அசிம் பிரேம்ஜி பல்கலை கழகத்தினர், 2021ல் கவனித்தனர். இந்த கிராமத்தில் ஏதாவது ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தங்கள் பணியை தொடங்கினர். இதற்காக, விரிவுரையாளர்கள், மாணவர்கள் இணைந்து குழுக்களாக கிராமத்திற்கு வருகை தந்தனர்.
கழிவு மேலாண்மை குறித்து கிராம பஞ்சாயத்தினரிடம் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எடுத்துரைத்தனர். பாடம் எடுப்பதை தாண்டி களத்தில் இறங்கி வேலையும் பார்த்தனர். 2023ல் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராமத்திலே தங்கத்துவங்கினர். மாணவர்கள் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மக்கும் குப்பை, மக்கா குப்பை என, பிரித்து சேகரித்தனர். கண்ட இடங்களில் குப்பை கொட்ட அனுமதியில்லை என, பலகைகள் வைத்தனர்.
இதை அனைவரும் கடைப்பிடிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும், காலம் செல்ல செல்ல அனைவரும் பொது இடங்களில் குப்பை வீசுவதையும், போடுவதையும் நிறுத்தினர்.
மேலும், மாணவர்களுடன் இணைந்து கிராமத்தினரும் குப்பை சேகரிக்கும் மற்றும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பல்கலையின் சார்பில், 'பூஜ்ய கழிவு மையம்' திறக்கப்பட்டது. இங்கு குப்பைகள் கொண்டு வரப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டன. இயந்திரங்களின் மூலம் மக்கும் குப்பைகளில் இருந்து உரங்கள் தயாரிக்கப்பட்டன.
தடை விதிப்பு வீடுகளில் இருந்து மக்கும், மக்கா குப்பை என பிரிக்கப்பட்டு, வண்டிகளில் கொண்டு வரப்பட்டு கழிவு மையத்திற்கு வரும். இது நடைமுறையாக மாறியது. பிற பகுதிகளில் இருந்து வரும் வண்டிகள் கிராமத்தில் குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்காக, க்யூ.ஆர்., கோடு, செயலி போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தையும் மாணவர்களே செய்தனர்.
இதனால், தற்போது பிலாபுரா கிராமமே குப்பையில்லாமல் சுத்தமாக இருக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

