ஏ.ஐ. எது வேண்டுமானாலும் தரும்: 'எமோஷனை' தர முடியுமா?
ஏ.ஐ. எது வேண்டுமானாலும் தரும்: 'எமோஷனை' தர முடியுமா?
ADDED : செப் 13, 2026 08:09 AM

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மனநலத்துறை மற்றும் இந்திய மனநல மருத்துவர்கள் சங்கம் சார்பில் உலக தற்கொலை தடுப்பு தின கருத்தரங்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்றம் நடந்தது.
'சமூக ஊடகங்கள் மாணவர்களின் தற்கொலை எண்ணங்களை தடுக்கின்றனவா, துாண்டுகின்றனவா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. மருத்துவக் கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று பேசினர்.
நடுவராக பங்கேற்ற சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மனநல மருத்துவ சிறப்புப்பிரிவு பேராசிரியர் (ஓய்வு) அசோகன் பேசியதாவது:
கடந்த 50, 60 ஆண்டுகளுக்கு முன்பும் தற்கொலைகள் நடந்துள்ளன. ஆனால், அவற்றுக்கு கடன் தொல்லை, சமூக ஒடுக்குமுறை, அவமானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தன. இன்றைய சூழலில் தற்கொலை எண்ணங்களுக்கான காரணங்களில் சமூக ஊடகங்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது.
சமூக ஊடகங்களால் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பேசுவது குறைந்து வருகிறது. மனதில் இருப்பதை குடும்பத்தினர், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதை விட, சமூக ஊடகங்களில் பதிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான பழக்கம் அல்ல.
எல்லாமே ஆன்லைன் என்ற மனநிலையில், உறவுகளையும் மறந்து வருகிறோம். வீட்டில் இருக்கும் தாத்தா ஒரு நுாலகம்; பாட்டி ஒரு டாக்டர் போன்றவர்கள். அவர்களிடம் அமர்ந்து பேசுவதற்குக்கூட நேரம் ஒதுக்குவதில்லை. அண்டை வீட்டினர், உறவினர்களுடன் இணைந்து வாழ்வதும் குறைந்து வருகிறது.
சமூக ஊடகங்கள் நல்லதையும் கெட்டதையும் கற்றுக் கொடுக்கின்றன. அதில் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். பலரும் நேரில் பேசாமல் மனதில் பல விஷயங்களை வைத்துக்கொள்வதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
மேலும், சாதாரணமாக நாமே செய்யக்கூடிய வேலைகளுக்குக்கூட இணையத்தை நாடும் அளவுக்கு சமூக ஊடகங்கள் நம்மை சோம்பேறியாக்கி வருகின்றன. கட்டுப்பாடுகள் இல்லாமல் தகவல்கள் பரவுவதால் கலாசாரத்திலும் மாற்றம் ஏற்படுகிறது.
என்ன வேண்டுமானாலும் ஏ.ஐ. வாயிலாக தெரிந்து கொள்ள முடியும். ஆனால், மனிதர்களின் உணர்வுகளை ஏ.ஐ.யால் வழங்க முடியாது. சமூக ஊடக பயன்பாட்டுக்கும் உரிய கட்டுப்பாடுகள் தேவை. உடற்பயிற்சியை மறந்து, மொபைல்போனில் கட்டைவிரலுக்கு மட்டும் உடற்பயிற்சி கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிறைவாக சமூக ஊடகங்கள் மாணவர்களின் தற்கொலை எண்ணங்களை துாண்டுகின்றன என தீர்ப்பு வழங்கப்பட்டது.
