ADDED : ஜூன் 10, 2026 10:48 PM

- நமது நிருபர் -:
தமிழகத்தின் கடலுார் மாவட்டத்தில் அமைந்துள்ள பிச்சாவரம், உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநில காடுகளை கொண்டுள்ளதால், இங்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகமாக இருக்கும். சதுப்பு நிலம் என்பது கடலும், நிலமும் சந்திக்கும் முகத்துவார பகுதியில், உப்பு நீரில் வளரக்கூடிய அடர்ந்த வனங்கள் நிறைந்த பகுதியாகும்.
அதுபோல, உடுப்பி மாவட்டம் ஆன்மிகம், கடற்கரைகள், தீவுகள், பவளப்பாறைகள், ஆற்றின் முகத்துவாரங்கள், சதுப்பு நிலக்காடுகளுக்கு பெயர் பெற்றது. இங்கும் ஒரு, பிச்சாவரம் அமைந்து உள்ளது. இது, பெரும்பாலான சுற்றுலா பயணியருக்கு தெரிவதில்லை.
உடுப்பியின் கோடிஹோல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது பரம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நில காடுகளை காணலாம்.
இந்த மரங்கள், கடலோர காவலர்களாக செயல்படுகின்றன. அவற்றின் அடர்த்தியான வேர் அமைப்புகள், ஆறுகள், நிலத்தில் இருந்து அடித்து வரப்படும் வளமான வண்டல் மண்ணை தடுத்து, அது, கடலுக்குள் அடித்து செல்லப்படுவதை தடுக்கின்றன.
சதுப்பு நில காடுகளில் வசிக்கும் பறவையை காண பலரும் இங்கு வருகின்றனர். இவர்களில் சிலர் இடுப்பளவு தண்ணீரில் நடந்தும் செல்கின்றனர். சிலர் துடுப்பு படகில் சென்று பார்வையிடுகின்றனர். புகைப்பட கலைஞர்களின் சொர்க்கம் என்று கூறலாம்.
