ADDED : ஆக 19, 2026 11:15 PM

- நமது நிருபர் -
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவில் ஏராளமான தீவுகள் உள்ளன. செயின்ட் மேரீஸ், நேத்ராணி, குரும்காட் ஆகியவை சுற்றுலா பயணியர் நன்கு அறிந்த இடங்களாக உள்ளன. ஆனால் அதிகம் அறியாத சில சிறிய தீவுகளும் நிறைய உள்ளன. இதில் ஒன்று உப்பினகுத்ரு தீவு.
உடுப்பியின் குந்தாபுராவில் இருந்து 7 கி.மீ.,யில் அமைந்துள்ளது. உதயவாரா ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள இந்த குட்டி தீவு, சுற்றுலா பயணியர் மனதை மயக்கும் வகையில் உள்ளது.
உப்பின என்றால் உப்பு என்றும், குத்ரு என்றால் தீவு என்றும் பொருள்படுகிறது. இந்த தீவு ஒரு காலத்தில் உப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. உதயவாரா ஆற்றின் கரையில் இருந்து, தீவுக்கு சிறிய படகுகள் இயக்கப்படுகின்றன.
அலைகளின் சத்தம், தீவில் உள்ள பசுமைகளை பார்த்தபடியே, சுற்றுலா பயணியர் நேரத்தை போக்குவதற்கு ஏற்ற இடமாக உள்ளது.
தீவின் கரையோரம் ஆழம் குறைவாக இருப்பதால், 'டைவ்' அடித்து குளித்து மகிழலாம். தீவு பகுதியில் சிறிய விநாயகர் கோவில் உள்ளது.
படகு சவாரி, ஜெட் ஸ்கீயிங், பாரா செயிலிங் போன்ற நீர்விளையாட்டுகளும் இங்கு உள்ளன. தீவில் இருந்து சிறிது துாரத்தில் சதுப்பு நில காடுகள் உள்ளன. இங்கு சென்று பல்வேறு தாவரங்கள், விலங்கினங்களை காணலாம்.
தீவில் இருந்து சதுப்பு நில காட்டிற்கு படகில் தான் செ ல்ல வேண்டும். மிகவும் அமைதியான இடத்தை தேடுபவர்களுக்கு, இந்த தீவு நிச்சயம் ஒரு வரமாக அமையும்.
