பெங்களூரின் சுற்றுப்பகுதியில் ஒரு நாள் சுற்றுலா தலங்கள்
பெங்களூரின் சுற்றுப்பகுதியில் ஒரு நாள் சுற்றுலா தலங்கள்
ADDED : ஏப் 23, 2026 04:12 AM

- நமது நிருபர் -
கோடை விடுமுறை துவங்கியுள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்கவும், பணி நெருக்கடியில் இருந்து 'ரிலாக்ஸ்' செய்து கொள்ளவும், சுற்றுலா சென்று வர பலரும் விரும்புவர். ஆனால் அதிக நாட்கள், தொலைவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல, நேரம் இருக்காது. இவர்களுக்காகவே பெங்களூரு சுற்றுப்பகுதிகளில் சுற்றுலா தலங்கள் உள்ளன. ஒரு நாளில் சென்று வரலாம்.
தேவனஹள்ளி கோட்டை உங்கள் சுற்றுலாவை அதிகாலை தேவனஹள்ளி கோட்டையில் துவக்குவது நல்லது. கெம்கேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகில், வரலாற்று பிரசித்தி பெற்ற கோட்டை உள்ளது.
இது திப்பு சுல்தானால் கட்டப்பட்டது. 15ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை, கல் சுவர்கள், அழகான கோவில்கள் கொண்டது.
காலை குளிர்ச்சியான சூழ்நிலையில், கோட்டையை சுற்றி நடந்து வருவது, மனதுக்கு இதம் அளிக்கும். இங்குள்ள வேணுகோபால சுவாமியை தரிசிக்கலாம். கோவிலின் கட்டடக் கலை, சுற்றுலா பயணியரை வெகுவாக ஈர்க்கும்.
போட்டோ, வீடியோ ஷூட் நடத்த, அற்புதமான இடமாகும்.
அங்கிருந்து தொட்டபல்லாபூருக்கு சென்றால், வரலாற்று பிரசித்தி பெற்ற காடி சுப்ரமண்யா கோவிலை அடையலாம். ஒரே கல்லில் சுப்ரமண்யா மற்றும் நரசிம்ம சுவாமியின் விக்ரகங்கள் இருப்பது, இக்கோவிலின் சிறப்பாகும். நாகதோஷம் நிவர்த்தி செய்வதில், விருப்பங்களை நிறைவேற்றுவதில் பிரசித்தி பெற்றதாகும்.
சிக்க மதுரே அங்கிருந்து சிறிது துாரத்தில், 'சிக்க மதுரே' என்று அழைக்கப்படும் மதுரே உள்ளது. இங்கு குடிகொண்டுள்ள சனீஸ்வரரை தரிசிக்கலாம்.
இந்த கோவிலில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி, பிரார்த்தனை செய்தால் கஷ்டங்கள் விலகும் என்பது ஐதீகம். இங்குள்ள அமைதியான கிராம சூழ்நிலை, சுற்றுலா மகிழ்ச்சியை மேலும் அதிகமாக்கும்.
சிவகங்கை மலை சனீஸ்வரரை தரிசனம் செய்த பின், சிவகங்கை மலைக்கு செல்லுங்கள். துாரத்தில் இருந்து பார்த்தால், சிவலிங்கத்தை போன்று தென்படும் இம்மலை, 'தென்காசி' என, அழைக்கப்படுகிறது.
சாகச பிரியர்களுக்கு ஏற்ற இடமாகும். மலையின் மத்திய பகுதியில், கவி கங்காதரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இங்குள்ள சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்தால், அது வெண்ணெயாக மாறும் அதிசயத்தை, இந்த கோவிலில் பக்தர்கள் காணலாம்.
சிவகங்கை மலை மீது ஹொன் னாதேவி கோவில் உள்ளது. கோவிலை தரிசிப்பதுடன், மலை உச்சியில் கண்களுக்கு இனிமையான இயற்கை காட்சிகளை ரசிக்கலாம்.
பசுமையான காட்சிகள், தென்றல் காற்று உடல் அசதியை போக்கி, உற்சாகத்தை அதிகரிக்கும். மலையில் குரங்குகள் தொந்தரவு அதிகம். எனவே உங்களின் பைகள், சிற்றுண்டியை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்.
கோடைக்காலம் என்பதால், போதுமான அளவில் குடிநீர், பழங்கள், 'எனர்ஜி' டிரிங்குகளை கொண்டு செல்ல மறக்காதீர்கள். தெளிவான பருத்தி ஆடையை அணியுங்கள். சிவகங்கை மலையில் ஏற வசதியான செருப்புகளை அணிந்து கொள்ளுங்கள்.
அதிகாலை புறப்பட்டால், ஒரே நாளில் மேற்கூறிய சுற்றுலா தலங்கள், புராதன கோவில்களை தரிசிக்கலாம். மாலை இனிமையான நினைவுகளுடன், வீடு திரும்பலாம்.
