சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து; உண்மையில் சனாதனம் எவற்றை வலியுறுத்துகிறது?
சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் கருத்து; உண்மையில் சனாதனம் எவற்றை வலியுறுத்துகிறது?
UPDATED : செப் 04, 2023 01:40 PM
ADDED : செப் 04, 2023 01:34 PM

சென்னையில் முன்னதாக நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞர் அணிச் செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். 'கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்டவேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்யவேண்டிய முதல் பணி' என்றார். இது சர்ச்சைக்குள்ளாகியது. இதனையடுத்து தற்போது சனாதனத்துக்கு ஆதரவாக ஹேஷ்டேகுகள் டிவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன. உண்மையில் சனாதனம் என்றால் என்ன, அது எதை வலியுறுத்துகிறது எனப் பார்ப்போமா?
ஹிந்து மதமே சனாதன தர்மம் என்பது தவறு. சனாதன தர்மம் என்பது மதத்தைத் தாண்டிய வாழ்வியல் முறை. சனாதனம் என்பதற்கு 'புராதனம் அல்லது காலத்தால் அழியாதது' என்று பொருள். ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும் நிறைவாகவும் வாழ உதவும் கோட்பாடுகளே சனாதன தர்மம். இந்தக் கோட்பாடுகள் வழிகளே அன்றி விதிகள் அல்ல. ஒருவர் எந்த மதத்தவர் ஆனாலும் அவர் சனாதன தர்மத்தைப் பின்பற்ற முடியும்.
சனாதன தர்மத்தைப் பின்பற்ற நினைக்கும் ஒருவர் எப்போதும் உண்மை பேசவேண்டும். உபநிஷதங்களில் 'சத்யம் வத' (உண்மையைப் பேசு) உள்ளிட்ட வரிகள் உண்டு. சத்தியமும் இனிமையும் வாய்ந்தவற்றைப் பேசவேண்டும். உண்மையாய் இருப்பினும் அதனை கடுமையாகப் பேசக்கூடாது. பொய் பேசக்கூடாது. ஸ்ரீராமர் மற்றும் ராஜா அரிச்சந்திரனின் கதைகள் இந்தக் கருத்தை நமக்கு தெளிவாக விளக்குகின்றன.
![]() |
வேதங்களில் வயது முதிர்ந்தவர்களை மதித்தல் பற்றி பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தாய்-தந்தையர், குரு மற்றும் விருந்தினர்களுக்கு மரியாதை அளிப்பதை சனாதனம் வலியுறுத்துகிறது.
சனாதனத்தில் சுகாதாரம் பேண பல விதிகள் உள்ளன. கழிப்பறை பயன்பாடு, கிரகணம் ஆகியவற்றின் பின்னர் குளித்தல் சனாதனத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. நோயாளிகள், முதியவர்களுடன் பேசும்போது இடைவெளி கடைப்பிடித்தல், துக்க நாட்களில் பிரிவு அனுஷ்டித்தல் போன்றவை பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
![]() |
மஹாபாரதத்தில் வரும் சுக்ராச்சாரியார், கச தேவயானி விருத்தாந்தம் மது வகைகளின் தீமை பற்றி தெளிவாக விளக்குகிறது. மாமிசம், மதுவைத் தவிர்க்க சனாதனம் வலியுறுத்துகிறது.
அஹிம்சை பாரத கலாசாரத்தின் முக்கிய அங்கமாகும். 'அஹிம்சா பரமோ தர்ம:' (அஹிம்சையே மேலான தர்மம்) என்பது சனாதன கோட்பாடு. பசு முதலிய விலங்குகளுக்கு நாம் இறை ஸ்தானம் தருகிறோம். ஜீவகாருண்யத்தின் மகத்துவத்தை உணர்ந்ததால் தான் நாம் துளசி போன்ற செடிகளின் இலைகளை பறிக்கும் முன்னர் நாம் ஸ்லோகம் சொல்லி மன்னிப்பு கோருகிறோம்.
![]() |
நமது வாழ்க்கை அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பேறுகளை உள்ளடக்கியது. இவற்றை சரிவரப் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பொருள் மற்றும் பிற இன்பத்தில் மனதை செலுத்தினால் வாழ்வில் துன்பமே மிஞ்சும். இதையே ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் இப்படி குறிப்பிடுகிறது. இதன்மூலம் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கருத்தை சனாதனம் வலியுறுத்துகிறது.
சனாதனம் பலவகை உருவ வழிபாடுகளை வலியுறுத்துகிறது. கடவுள் ஒருவரே என்றாலும் அவர் பல வடிவங்களில் வழிபடக் கூடியவர். இதனால்தான் உருவ வழிபாடு, அருவ வழிபாடு, ஒளி வழிபாடு, இயற்கை வழிபாடு, தியானம், நாம சங்கீர்த்தனம் என எந்த விதமான வழிபாட்டு முறைக்கும் ஹிந்து மதத்தில் இடம் உள்ளது. எனவே இந்து மதத்தில் பல ஆயிரம் தெய்வங்கள் உள்ளன.



