ADDED : மே 27, 2023 11:15 AM

'இது பரம்பரை பரம்பரையா வருவது', 'எங்க பரம்பரை சொத்து இது ', 'எங்க பரம்பரைக்கே இது ரொம்ப பெருமை'... இது போன்று பலவாறும் பரம்பரை எனக் குறிப்பிட்டு பலரும் கூறுவர். குறிப்பாக நம் தாத்தா, பாட்டிகள் அடிக்கடி இந்த வார்த்தையைக் கூறுவர். இந்த பரம்பரை எப்படி வருகிறது எனப் பார்ப்போமா...
முதல் தலைமுறை நாம். நம் அப்பா, அம்மா ஆகியோர் இரண்டாவது தலைமுறை. நம் பாட்டன், பாட்டி ஆகியோர் மூன்றாம் தலைமுறை. நான்காம் தலைமுறை பூட்டன், பூட்டி.
ஐந்தாம் தலைமுறை ஓட்டன், ஓட்டி எனவும், ஆறாம் தலைமுறை சேயோன், சேயோள் எனவும் அழைக்கப்படுகின்றனர். ஏழாம் தலைமுறை பரன், பரை என அழைக்கப்படுகின்றனர். இதில், பரன் மற்றும் பரை இரண்டையும் சேர்த்துதான் பரம்பரை என அழைக்கப்படுகிறது. ஆழ் ந்த சிந்தனையுடன் ஏழு தலைமுறையையும் சேர்த்து பரம்பரை எனக் குறிப்பிட்டு நம் முன்னோர்கள் பெருமைப்படுத்தியுள்ளனர்.
பிற மொழிகளில் இதுபோன்ற உறவுகள் குறிப்பிடப்படாத நிலையில் தமிழில் அழகாக கூறியுள்ளனர் நம் முன்னோர்கள். இது தமிழ் மொழிக்கே உரிய சிறப்பாகும். இந்த உறவு முறைகளையும், அவர்களின் பெயர்களையும் குழந்தைகளுக்குக் கற்றுத் தரலாம். அப்போது, நம் பரம்பரை குறித்த பெருமை, வரலாறுகளை குழந்தைகள் எளிதாக தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. குறிப்பாக, இதனால், பரம்பரை மட்டுமின்றி தமிழின் சிறப்புகளையும் அடுத்த தலைமுறையிடம் எளிதாகக் கொண்டு செல்லலாம்.
அதேப்போல், நம் குழந்தைகளை மகன், மகள் எனக் குறிப்பிடுகிறோம். இவர்களுக்கு பிறந்தவர்கள் பெயரன், பெயர்த்தி எனக் குறிப்பிடப்படுகிறது. அடுத்த தலைமுறையினர், கொள்ளுப்பெயரன், கொள்ளுப்பெயர்த்தி எனவும், அதற்கும் அடுத்த தலைமுறை எள்ளுப் பெயரன், எள்ளுப் பெயர்த்தி எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
