'இசை' படம் ஓர் உண்மைக்கதை; அன்றே கணித்தார் எஸ்ஜே சூர்யா..!
'இசை' படம் ஓர் உண்மைக்கதை; அன்றே கணித்தார் எஸ்ஜே சூர்யா..!
UPDATED : ஏப் 29, 2023 10:14 PM
ADDED : ஏப் 29, 2023 10:10 PM

ஹென்ரிட்ச் வில்லியம் எர்னஸ்ட் (1814-1865) செக் குடியரசில் பிறந்த ஓர் இசைமேதை. 18 ஆம் நூற்றாண்டின் தலைசிறைந்த மேற்கத்திய இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார் எர்னஸ்ட். வயோலா, வயலின் உள்ளிட்ட பல இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் பெற்ற அவர், சிறுவயது முதலே இத்தாலிய இசையமைப்பாளர் நிக்கோலோ பகானினியின் தீவிர விசிறியாக இருந்தார். ஒன்பது வயதில் வயலின் கற்கத் துவங்கிய எர்னஸ்ட், பகானினியின் இசைக் கச்சேரிகளில் தவறாமல் இடம்பெற்றார். தனது மானசீக இசை குரு பகானினியின் இசையமைப்பு நுணுக்கங்களைக் கற்று அவர்போல தானும் பெரிய இசைக்கலைஞர் ஆக வேண்டும் என்கிற லட்சியத்தைக் கொண்டிருந்தார்.
![]() |
பதின்பருவத்திலேயே பல சிக்கலான இசைக் குறிப்புகளை உருவாக்கி இசையமைத்த எர்னஸ்டின் புகழ் ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கத் துவங்கியது. எர்னஸ்டின் ஒரு கச்சேரியைக் கண்டு வியந்த பாகானினி, அவரது எதிர்காலம் சிறக்க, இசைத்துறையில் அவரை வழிநடத்தினார். தனது குருவின் அறிவுரைகளைப் பின்பற்றி குறுகிய காலத்தில் அடுத்த பகானினி எனக் கூறும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார் எர்னஸ்ட்.
தனது தீவிர விசிறியான எர்னஸ்ட் தனக்கே தொழில் போட்டியாளர் ஆவார் என பகானினி அப்போது நினைக்கவில்லை. ஐரோப்பிய இசை ரசிகர்கள் பலர் பகானினியின் இசையோடு எர்னஸ்டின் இசையை ஒப்பிடத் துவங்கினர். ஒரு இசைக் குறிப்பை பகானினி வயலினில் வாசிப்பதைவிட எர்னஸ்ட் சிறப்பாக வாசிப்பதாக பரவலாகப் பேசப்பட்டது. பகானினி இசையமைத்த பிரபல பாடல்களை பகானினியைவிட எர்னஸ்ட் நன்கு வாசிக்கிறார் என பேச்சு கிளம்ப, கோபத்தின் உச்சிக்குச் சென்றார் பகானினி.
![]() |
வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கைவைக்கும் பத்மாசுரன்போல எர்னஸ்ட் குருவை மிஞ்சிய சிஷ்யப்பிள்ளையாக வளர்ந்துவிட்டாரே என்கிற அனல் பகானினியை வாட்டியது. பகானினி இசையமைத்த புது இசையை ஒருமுறை கேட்டாலே போதும். எர்னஸ்ட் அதை அப்படியே வயலினில் தத்ரூபமாக வாசித்துவிடுவார். அந்த அளவு இசை ஞானம் பெற்றிருந்தார் எர்னஸ்ட்.
ஒருமுறை பகானினி தங்கியிருந்த விடுதி அறை அருகே வேண்டுமென்றே எர்னஸ்ட் அறை எடுத்துத் தங்கினார். சுவர் அருகில் சென்ற எர்னஸ்ட் அடுத்த அறையில் பகானினி இசையில் உருவான பாடலை ஒட்டுக்கேட்டார். உடனே அதை தனது கச்சேரியில் வாசித்து கைத்தட்டல் பெற்றார்.
எர்னஸ்டின் இதுபோன்ற சிற்சில இம்சைகளால் நொந்துபோன பகானினி, எதற்காக இந்த சின்னஞ்சிறுவனை நாம் ஆதரித்து வளர்த்துவிட்டோம் என எண்ணி வேதனைப்பட்டார். ஒருமுறை பகானினி கிதாரில் புதிய பாடலை வாசித்து மெட்டமைத்து இசைக்குறிப்பை எழுதிக்கொண்டிருந்தார். அப்போது அறைக்குள் எர்னஸ்ட் வரவே கிதாரை மூலையில் வீசிவிட்டு இசைக்குறிப்பை தனது படுக்கைக்குக்கீழ் மறைத்து வைத்தார். மாபெரும் இசை மேதையான தான் ஒரு சிறுவனுக்கு பயந்து இப்படிப்பட்ட வேலையெல்லாம் செய்ய வேண்டியுள்ளதே என நினைத்து அங்கலாய்த்தார் பகானினி.
![]() |
அதீத மதுப்பழக்கம், தகாத உறவு காரணமாக 53-வது வயதிலேயே பாலியல் நோயால் மரணம் அடைந்தார் பகானினி. பகானினியின் மறைவுப் பின்னரும் எர்னஸ்ட் அவரை தனது மானசீக குருவாகவே நினைத்து வந்தார். பகானினி நினைவாக ஒரு பாடலைக்கூட இசையமைத்தார். இன்று மேலை நாட்டு இசை வரலாற்றில் எர்னஸ்ட்தான் பகானினியில் வாரிசு எனப் பதிந்துவிட்டது. மறைந்த பகானினி இதை விரும்பினாரோ இல்லையோ அதுதான் உண்மை என்பதை மறுப்பதற்கில்லை. இச்சம்பவம் குறித்த உங்கள் கருத்து என்ன எனப் பதிவிடுங்களேன்..!



