இந்தியாவில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற செய்யவேண்டியது என்ன?
இந்தியாவில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற செய்யவேண்டியது என்ன?
UPDATED : ஜன 21, 2023 01:51 PM
ADDED : ஜன 20, 2023 02:31 PM

உலகின் ஆபத்தான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று துப்பாக்கி சுடுதல். துப்பாக்கி சுடுதல் போட்டியில் பாதுகாப்பு மிக அவசியம். இதனாலேயே இந்திய துப்பாக்கி சுடுதல் கிளப்களில் பாதுகாப்பாக துப்பாக்கி சுட வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இந்தியாவில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் சேர அனுமதி பெறவேண்டும். அத்துடன் துப்பாக்கி சுட உரிமம் பெறுவதும் கட்டாயம். துப்பாக்கி சுட வயது வரம்பு என்ன, துப்பாக்கி உரிமம் பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டுமெனப் பார்ப்போமா?
துப்பாக்கி சுடுதல் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இண்டோர் ஷூட்டிங் ரேஞ்ச் மற்றும் அவுடோர் ஷூடிங் ரேஞ்ச். இண்டோர் ஷூட்டிங் ரேஞ்சில் நீண்ட வெட்டவெளி அறை ஒன்றில் துப்பாக்கி சுட போட்டியாளர்கள் பயிற்சி எடுப்பர். நான்கு பக்கமும் சுவரால் அடைக்கப்பட்ட ஒரு பகுதியில் துப்பாக்கி சுடும்போது எதிரொலிக்கும் சப்தம் காது சவ்வுகளை பாதிக்கும். எனவே அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு உடைகள் மற்றும் சவுண்ட் ஃப்ரூஃப் இயர்போன்கள் வழங்கப்படும். சிறிய தூரத்தில் துப்பாக்கி சுட இந்த இண்டோர் பயிற்சி உதவும். சுவர்களில் ஒலியை உறிஞ்சும் பேடிங் வசதி செய்யப்பட்டு இருக்கும்.
அவுடோர் ஷூடிங் ரேஞ்சில் நகரத்தைத் தாண்டி ஒதுக்குப்புறமான மலை அல்லது காட்டுப் பகுதியில் இலக்கில் குறிவைத்து சுட வசதி செய்யப்பட்டு இருக்கும். இண்டோர் ரேஞ்சில் தேர்ச்சி பெற்ற பலர் அடுத்து நீண்ட தூர இலக்கை சுட அவுடோர் ரேஞ்ச் பயிற்சி பெறுவர். இலக்குக்குப் பின்னல் கனமான சுவர் அமைக்கப்பட்டு இருக்கும். பயிற்சி பெறுவோர் ஒருவேளை தவறாக சுட்டாலும் குண்டு சுவர் மீது படும்.
சமீப காலங்களில் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைஃபிள்கள் துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இண்டோர் ரேஞ்சில் அதிகபட்சமாக 10 மீட்டர் தூரம் சுட பயிற்சி பெறலாம். இதற்கு உரிமம் தேவையில்லை. இதற்கு மேலான தூரத்தில் உள்ள இலக்கை சுட்டுப் பயிற்சி செய்ய 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு உரிமத்தை கட்டாயமாக்கி உத்தரவு வெளியிட்டுள்ளது. துப்பாக்கி உரிமம் வழங்க, பாதுகாப்பு கருதி அதிக கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கும் உலக நாடுகளில் ஒன்று இந்தியா.
![]() |
துப்பாக்கி கிளப்பில் உறுப்பினர் ஆக 18 வயது நிரம்பியவராக இருக்கவேண்டும். ஒருவேளை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும்போது பயிற்சி பெறுவோருக்கு உடலில் காயம் ஏற்பட்டால் செலவை ஏற்க மூன்றாம் நபர் காப்பீடு அல்லது வங்கி உத்தரவாதம் கட்டாயம். காவல்துறை, இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் துறையினருக்கு துப்பாக்கி பயன்படுத்த காப்பீடு அவசியமில்லை.
மத்திய விளையாட்டுத் துறை, இந்திய தேசிய ரைஃபிள் அமைப்பு, மாநில விளையாட்டு அமைப்பு மற்றும் மாநில ரைஃபிள் அமைப்பு உள்ளிட்டவை அவ்வப்போது தனியார் ரைஃபிள் கிளப்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சோதனை மேற்கொள்ளும். சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியாளர்கள் தங்களுக்கென அனுமதிக்கப்பட்ட தூரத்தில் அனுமதிக்கப்பட்ட துப்பாக்கி ரகத்திலேயே பயிற்சி மேற்கொள்ளவேண்டும். துப்பாக்கியை பயிற்சி மையத்துக்கு வெளியே பயன்படுத்தக் கூடாது. இவற்றை மீறுவோரது உரிமம் எந்நேரமும் ரத்து செய்யப்படலாம்.
தனியார் ரைஃபிள் கிளப்கள் சில ஆயிரங்களில் இருந்து சில லட்சங்கள்வரை கட்டணம் வசூலித்து துப்பாக்கி சுடுதல் பயிற்சி அளிக்கின்றனர். சென்னை, மும்பை, டில்லி என பல இந்திய நகரங்களில் இதுபோன்ற தனியார் ரைஃபிள் கிளப்கள் உள்ளன. இவை சான்றிதழ் பெறும் குறுகிய கால பயிற்சிகள் அளிக்கின்றன. மேலும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கின்றன.

