
'செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களோடு மனிதர்கள் உறவாடும் இந்நேரத்தில், இது பேசினால்...
'நான் 58 ஏ 'வ்ரூம்... வ்ரூம்... - சேலம், ஓமலுார் அரசுப்பேருந்து பணிமனையில அன்றாடம் நான் இப்படி சோம்பல் முறிக்கிறப்போ காலையில மணி 6:00. கடந்த 38 ஆண்டுகளா தினமும் ஆறு தடவை அரங்கனுார் - சேலம் பழைய பேருந்து நிலையம் இடையில பயணிக்கிற நகரப்பேருந்து நான். என்னோட ஒருநாள் சராசரி பயண துாரம் 360 கி.மீ.,!
'அரங்கனுார், காட்டூர், காட்டுவளவு, பெரியப்பட்டி, ஏனாதி கிராம மக்கள் சேலத்துக்கு வந்து போக என்னைத்தான் அதிகம் பயன்படுத்துறாங்க. சரியா 7:00 மணிக்கு அரங்கனுார் மாரியம்மன் கோவிலை வட்டமடிச்சு, 'ஹார்ன்' மூலமா அலறுவேன். கட்டட வேலைக்கு போறவங்களும், படிக்கிற பிள்ளைகளும் சத்தம் கேட்டு என்கிட்டே ஓடியாந்திருவாங்க!
'சாயந்திரம் 5:00 மணி நடையில இவங்க எல்லாரோடவும் திரும்புறப்போ, கூலி பணத்தை 'டாஸ்மாக்'ல அழிச்ச புருஷன்கிட்டே நியாயம் கேட்குற சம்பவம் தினமும் நடக்கும்! 'மாதம்தோறும் மின் கணக்கீடு'ங்கிற தேர்தல் வாக்குறுதி பல் காட்டுற மாதிரி அந்த குடிகாரன் இளிப்பான்; சம்சாரம் பாவம்... அழும்!
'சிலநேரங்கள்ல இந்தமாதிரியான கண்ணீருக்கு போட்டியா பெய்யுற மழை எனக்குள்ளே ஊத்தும்... எல்லாரையும் நல்லா குளிப்பாட்டி விட்ருவேன். இது போதாதுன்னு, மழைநீர்ல மூழ்கியிருக்கிற செம்மாண்டப்பட்டி ரயிலடி சுரங்கப்பாதையை தவிர்க்க, 5 கி.மீ., சுத்திப் போவேன். அந்தசமயத்துல கூட அரசாங்கத்தை தான் மக்கள் திட்டுவாங்களே தவிர என்னை யாரும் திட்ட மாட்டாங்க!
'வெளிப்பார்வைக்கு இப்படி பவுசா தெரியுற நான் உள்ளுக்குள்ளே ஓட்டை உடைசலா இருந்தாலும் என் பிறப்புக்கு ஒரு அர்த்தம் இருக்குறதா உணர்றேன்; சரிதானே?'