PUBLISHED ON : ஏப் 20, 2025

செய்தி: நவம்பர் 22, 2011, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் காவல் நிலைய காவலர்களால் 17 வயது சிறுமி, கர்ப்பிணி உள்ளிட்ட மூன்று இருளர் இன பெண்கள் பாலியல் பலாத்காரம்!
அநீதி: குற்றம் நிகழ்ந்து 13 ஆண்டுகள் கடந்தும் குற்றப்பத்திரிகை குளறுபடியால் இன்னும் நீதி கிடைத்தபாடில்லை!
உமது நிர்வாகம் செயல்படுகிறதா அரசே?
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருத்தி நான். அந்த கொடூர சம்பவத்திற்கு பின் இன்றும் இயல்பான வாழ்க்கைக்கு என்னால் திரும்ப இயலவில்லை. பொது இடங்களுக்கு என்னால் தனியாக செல்ல முடியவில்லை. கூலி வேலைக்கு செல்லும் என் கணவர் வீடு திரும்ப சற்று தாமதம் என்றாலும் தனிமை தரும் பயத்தில் உடலில் பதற்றம் ஏற்படுகிறது.
இந்த வழக்கு சார்ந்த அலைக்கழிப்பு என் குழந்தைகளை பாதித்துவிடக்கூடாது என்று அவர்களை வெளியூரில் படிக்க வைக்கிறேன். என் துாக்கம் தொலைந்து பலநாட்கள் ஆகி விட்டது. இப்படி, என் குடும்பத்தின் நிம்மதி சிதைந்து போக காரணமான கயவர்கள் இன்று வரை குற்றவாளிகளாக அறிவிக்கப்படாமல் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
எங்களுக்கு நிகழ்ந்த அவலத்திற்கு அரசு கொடுத்த நிவாரணம் ஐந்து லட்சம் ரூபாய்; ஏன் அரசே... நிவாரணத்தில் குணமாகக்கூடிய காயமா இது?
'அண்ணா பல்கலை மாணவி' விவகாரத்தில் உடனடியாக அரங்கேறிய கைது நடவடிக்கை உனது நிர்வாகத் திறனுக்கு சான்று என்றால், குளறுபடி குற்றப்பத்திரிகையால் எங்களுக்கான நீதியை தாமதப்படுத்துவது உன் இயலாமையின் வெளிப்பாடு அல்லவா; பதில் சொல்!