முதல்வரே... ஒரு நிமிஷம்: இது விபத்தல்ல கொடுங்குற்றம்
முதல்வரே... ஒரு நிமிஷம்: இது விபத்தல்ல கொடுங்குற்றம்
PUBLISHED ON : ஜூன் 14, 2026

செய்தி: மதுபோதையால் தாறுமாறாக கார் இயக்கி ஒரு குடும்பத்தை அழித்த கார் ஓட்டுநர்!
அநீதி: மின்னலாய் ஜாமினில் வெளிவந்த குற்றவாளி; இன்னும் மது ஆறு வற்றாத தமிழகம்!
முதல்வரே... தாம்பரம் மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த 52 வயது இந்திராணியாகிய என் குடும்பத்தை அழித்தது தமிழகத்தில் நிரம்பி வழியும் போதை!
என் கணவர் பத்மநாபன், எங்களின் 23 வயது மகள், அவளது வயிற்றில் வளர்ந்த 8 மாத சிசு... எல்லோரையும் அழித்து விட்டது தமிழகத்தின் போதை கலாசாரம்! ஜூன் 23, 2025ல், மதுரவாயல் புறவழிச்சாலையில் நாங்கள் வந்த கார் மீது தவறான திசையில் வந்த கார் மோதி நிகழ்ந்தது அக்கோர சம்பவம்!
'டி2' குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், எப்.ஐ.ஆர்., எண்: 229ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 185, 'மது அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள் தாக்கத்தில் உள்ள நபர் வாகனம் ஓட்டியிருக்கிறார்' என்பதை உறுதி செய்தது. பிறகு...?
பிறகென்ன... விபத்திற்கு காரணமான வாடகை கார் ஓட்டுநர் ஜாமினில் வெளிவந்து விட்டார். அன்றைய விபத்தில் என் குடும்பத்தை மட்டுமல்ல... என் வலது கண் பார்வையையும் இழந்து விட்டேன். வலது கால் எலும்பு முறிவால் நிற்கவும், நடக்கவும் சிரமப்படும் எனக்கு நீங்கள் தரும் நீதி என்ன?
'மது போதையால் இனி தமிழகத்தில் விபத்து நிகழாது; பெண்களுக்கு பாதிப்பு இருக்காது' எனும் உத்தரவாதம் தருவீர்களா முதல்வரே?
