கல்லும் கலையும்: ஆறறிவு தாய்மை - ஐந்தறிவு பாசம்; பந்தி வைக்கும் சிற்பம்
கல்லும் கலையும்: ஆறறிவு தாய்மை - ஐந்தறிவு பாசம்; பந்தி வைக்கும் சிற்பம்
PUBLISHED ON : மார் 29, 2026

கும்பகோணத்தில் இருந்து ஏழு கி.மீ., தொலைவில், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலில் இருக்கிறது இச்சிற்பம்!
மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்து இக்கோவிலின் சிற்பங்கள் தாராசுரம் கோவில் சிற்ப பாணியை நினைவூட்டினாலும், முன் மண்டப சுற்றுச்சுவரில் வடக்குப்பக்க கோமுகத்துக்கு அருகில், யானைக் கன்றுகளின் பசியாற்றும் பெண்ணின் சிற்பம்... தனித்துவம்!
வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடித்திருப்பவள், வலப்புற கொண்டையுடன் காதுகளில் பெரிய குழை அணிந்திருக்கிறாள்; தோள், கைகள், இடையில் வசீகர ஆபரணங்கள்; அவளது அருகில் முன்னங்கால்கள் துாக்கி துள்ளியபடி இரண்டு யானை கன்றுகள்!
இவை அழகெனில் அவளது செயல்... ஆம்... வலக்கையால் இடது மார்பை ஏந்தி யானைக் கன்றின் பசியாற்றுகிறாள். தாய்மையின் பூரிப்பு அவள் முகத்தில்... பசியாறும் குதுாகலம் கன்றின் முகத்தில்; ரசித்து செதுக்கி இருக்கிறார் சிற்பி; அருகிருக்கும் பிறிதொரு கன்றின் முகத்தில் ஏக்கம் கலந்த மகிழ்ச்சி!
'மன பாரங்களோடு கோவில்களுக்கு வரும் பக்தர்கள், இதுபோன்ற பிரகார சிற்பங்களில் லயித்து தங்களின் மனக்காயங்களுக்கு மருந்து தடவிக் கொள்கின்றனர்; இந்த சிகிச்சை கூட சிற்பியின் நோக்கமாக இருந்திருக்கலாம்' என்று, கலைக்கு அற்புத விளக்கம் தருகிறார் கோவிலின் மூத்த குருக்களான சுந்தரமூர்த்தி.

