ADDED : பிப் 21, 2026 08:56 AM

''துருக்கியில் தோட்டம், பண்ணை, பங்களா வீடுகளுக்கு பாதுகாவலன் கங்கல் பப்பி தான். இதை கண்டால், ஓநாய் கூட்டம் அலறும். தனியாய் நின்று காவல் காப்பதில் கெட்டிக்காரன்,'' என்கிறார் டிக்சன்ஜான்.
தஞ்சாவூரில், 'ஆல்பா' கென்னல் நடத்தி வரும் இவர், பல் மருத்துவரும் கூட. கடந்த 15 ஆண்டுகளாக, இங்கிலாந்து, ரோம், துருக்கி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வித்தியாசமான நாட்டு நாய் இனங்களை இனப்பெருக்கம் செய்கிறார்.
கங்கல் இன பப்பியின் தனித்துவம் குறித்து இவர் நம்மிடம் பகிர்ந்தவை: துருக்கியின் மலை பிரதேசங்களில், ஆடு, தோட்ட பாதுகாவலுக்காக இனப்பெருக்கம் செய்யப்பட்டது கங்கல் இன நாய். நரி, ஓநாய் கூட்டங்களிடம் இருந்து, தனியாக நின்று காவல் காக்கும். ஒரு கங்கல் நாய், 20 நரிகளை தனியாக நின்று வேட்டையாடும் அளவிற்கு திறன் கொண்டது. ராட்வீலர், டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்களை விட அதிக கடிக்கும் திறன் இதற்கு உண்டு. ஆனால், இது தேவையில்லாமல் அத்திறனை பயன்படுத்தாது.
கிட்டத்தட்ட 70-80 செ.மீ., உயரம், 80 கிலோ வரை எடை கொண்டிருப்பதால், பார்க்கவே பயமுறுத்தும் தோற்றத்தில் இருக்கும். பதுங்கி தாக்குதல், உட்கார்ந்து, படுத்தபடியே நகருதல் போன்ற திறன்கள் இதனிடம் இல்லாததால் காவல், ராணுவ பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை.
நீளமான உடல், கூர்மையான முகம், ஆஜானுபாகு தேகம் இருப்பதால், எதிராளியை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளும். பங்களா, தோட்டம், கால்நடை பாதுகாப்புக்கு ஏற்ற நாய். இதை செல்லப்பிராணியாக வளர்க்கும் போது, அது குடும்பத்தில் உள்ளோரின் வயதுக்கு ஏற்ப புரிந்து நடந்து கொள்ளும். குழந்தைகளிடம் எளிதில் நெருங்கிவிடும். பிறந்து 2 மாதமே ஆன ஒரு கங்கல் பப்பியின் விலை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய்.
இதற்கு முடி அதிகளவில் இருப்பதால், பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கென்னல் கிளப் ஆப் இண்டியா சான்றிதழ் பெற்ற பப்பியை வாங்கலாம். மலை பிரதேசங்களில் வாழ்வோர், வன விலங்குகளிடம்இருந்து தற்காப்புக்கு கங்கல் பப்பியைஅதிகம் வாங்குகின்றனர் என்றார்.

