ADDED : அக் 25, 2024 11:06 PM

பச்சை கம்பளமாய் விரியும் புல்வெளி, அடர்ந்த காடு, சிறியதும், பெரியதுமான மரங்கள், செடிகள், பூச்சிகள், விலங்குகள் என, நீளும் இயற்கையின் பேரழகை, அடுத்த தலைமுறைக்கு கடத்தவும், விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான உறவை வலுப்படுத்தும் வகையிலும் திருச்சி, முசிறி அருகே, கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 20 ஏக்கரில் அமைந்துள்ளது நவீன் கார்டன் (Naveen Garden).
இதன் உரிமையாளர் நவீன் கிருஷ்ணன் கூறியதாவது:
இத்தோட்டத்துக்குள் நுழைந்தால் 'மூங்கில் காடுகளே, வண்டு முனகும் பாடல்களே, துார சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே...' என, மனதுக்குள் முணுமுணுத்தபடி, எக்கச்சக்க செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடலாம்.
இயற்கைக்கும் நமக்குமான உறவு, தொப்புள் கொடி பந்தம் போன்றது. நகரமயமாதலின் நீட்சியால், கிராமங்கள் சுருங்குவதோடு, விவசாயம், காடுகளின் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. மரங்களையும், செடிகளையும், வனவிலங்குகளையும், அடுத்த தலைமுறையினர், காணொளியில் மட்டுமே காணும் நிலை வெகுதுாரத்தில் இல்லை.
ஒரு இயற்கை ஆர்வலராக, அடுத்த தலைமுறைக்கு சில விஷயங்களை கடத்த வேண்டுமென்ற உந்துதலில், கடந்த 2006ல் துவங்கியது, 'குளோபல் நேச்சர் பவுண்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பு. இதன் பயிற்சி மையமாக விரிந்தது தான், நவீன் கார்டன். கிட்டத்தட்ட, 18 ஆண்டுகளாக தொடரும் இப்பயணத்தில், ஒவ்வொரு நாளும் கற்ற பாடங்கள் ஏராளம்.
இதன் மொத்த பரப்பளவு 20 ஏக்கர். இங்கு, 86 வகையான, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 2 ஏக்கர் பரப்பளவில், குறுங்காடு அமைத்திருக்கிறேன். செயற்கை நீர்வீழ்ச்சி, மண் குளியலுக்கு குளம் உள்ளது.
இதுதவிர, ஒன்பது வகை நாய்கள், ஒட்டகம், குதிரை, ஆடு, மாடு, கோழி மட்டுமல்லாமல், பாம்புகள், ஆமைகள், ராட்சத ஓணான், 15 வகையான பூச்சிகள், முள்ளெலி, வெளிநாட்டு வாழ் பறக்கும் அணில், முயல்கள் என, 60க்கும் மேற்பட்ட, 'எக்ஸாடிக் வெரைட்டி'கள் உள்ளன. இவை அனைத்தும், முறையாக அனுமதி பெற்று வளர்க்கப்படுகின்றன. மரங்கள் அதிகமிருப்பதால், பறவைகளின் ரீங்காரம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
சூழலியல் சார்ந்த பயிற்சி மையம் உள்ளது. இதுவரை, 75க்கும் மேற்பட்ட பயிற்சிகள், களப்பணிகள், கருத்தரங்குகள் நடத்தியுள்ளோம். விவசாயிகள், மாணவர்கள், தன்னார்வலர்கள், வெளிநாட்டினர் என பலரும், இங்கே தங்கி, விவசாயம் கற்று, செல்லப்பிராணிகளின் மொழியை அறிந்து செல்கின்றனர்.
பிறந்தநாள், திருமணநாளை கொண்டாட பலர் இங்கே வருகின்றனர். புதிய சூழலில் தங்கி, உடலுக்கும், மனதுக்குமான ஆக்ஸிஜனை நிரப்பி கொள்கின்றனர். 50க்கும் மேற்பட்டோர், இங்கே தங்க இயற்கை குடில் அமைத்திருக்கிறோம்.
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல... மற்ற ஜீவராசிகளுமானது என்பதை, அடுத்த தலைமுறை உணர்ந்தால் போதும். இங்குள்ள ஒவ்வொரு மரமும், செடியும், விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும் ஏராளமான ரகசியங்களை கற்றுத்தர காத்திருக்கின்றன. ஒருமுறை வந்து வசித்து தான் பாருங்களேன்.
''இயற்கை தாயின் மடியில் தவழ்ந்து
இப்படியும் வாழ இதயம் தொலைப்போம்...!''
தொடர்புக்கு: 98423 53713