ADDED : நவ 15, 2024 11:26 PM

மனிதர்களை போலவே நாய்களுக்கும், ஆரம்பத்தில், பால் பற்களே முளைக்கும். இது விழுந்த பிறகே, நிரந்தர பற்கள் வரும். இது, நாய்களின் இனம் மற்றும் உணவு முறையை பொறுத்து மாறுபடும். முன்பு நாய்கள் வேட்டையாடி சாப்பிட்டதால், வாயில் இழுத்து, கடிக்கும்போது, பற்களை தாமாகவே சுத்தப்படுத்தி கொண்டன.
ஆனால், தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், எளிதில் மெல்லும் வகையிலான உணவுகளை, பப்பிகளுக்கு தருவதால், அதன் பல் பராமரிப்பில், உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
பப்பிகளுக்கான பிரத்யேக 'டூத் பேஸ்ட்', 'பிரஷ்' கடைகளில் கிடைக்கின்றன. இதைக்கொண்டு, தினசரி அல்லது வாரத்திற்கு மூன்று நாட்களாவது, பப்பியின் பற்களை சுத்தப்படுத்த வேண்டும். நாம் உபயோகிக்கும் டூத் பேஸ்டை, பப்பிக்கு பயன்படுத்தும் பட்சத்தில், அதை விழுங்கினால், வயிற்றில் தொந்தரவு ஏற்படும்.
பப்பியின் பற்களை முறையாக பராமரிக்காவிடில், அதன்மீது கரை படிந்து விடும். இதை கண்டு கொள்ளாமல் இருந்தால், ஈறு பகுதி பலவீனமாகி, ரத்த கசிவு ஏற்படலாம். வாயில் துர்நாற்றம் வீசுதல், ஈறுகளில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படுதல், அதிக எச்சில் ஒழுகுதல் போன்றவை இருந்தால், கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
பற்களில் உள்ள கரைகளை சுத்தப்படுத்தும் போது, வலி ஏற்படும் என்பதால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது. மேலும், பொதுவாக பப்பிக்கு, ஆண்டுக்கு ஒருமுறையாவது, பல் பரிசோதனை செய்ய வேண்டும்.
- எம்.அரேஷ்குமார்,
கால்நடை மருத்துவர், வேலுார்.