/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
கொங்கு மண்டலத்தில் 'நோட்டுக்கு ஓட்டு' சாத்தியமா?-
/
கொங்கு மண்டலத்தில் 'நோட்டுக்கு ஓட்டு' சாத்தியமா?-
கொங்கு மண்டலத்தில் 'நோட்டுக்கு ஓட்டு' சாத்தியமா?-
கொங்கு மண்டலத்தில் 'நோட்டுக்கு ஓட்டு' சாத்தியமா?-
UPDATED : ஏப் 09, 2024 04:29 AM
ADDED : ஏப் 08, 2024 11:19 PM

ஞாயிறு விடுமுறை தினமான நேற்றுமுன்தினம் கொங்கு மண்டலத் தொகுதிகளில் பிரசாரங்கள் களைகட்டின. வழக்கமாக, விடுமுறை தினத்தில், காலையில் சற்று தாமதமாக சோம்பல் முறித்தெழும் பலரையும், அரசியல் கட்சியினர் துாங்கவிடவில்லை. தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் மற்றும் கூட்டணியினர் வீதிகளில் புடைசூழக் காணப்பட்டனர்.
அதிர்ந்த கட்சியினர்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில் ஒரு கிராமம்.
''மறக்காம உங்க வீட்ல இருக்கிற அஞ்சு ஓட்டையும் எங்களுக்குப் போட்ருங்க''
உரிமையோடு வீட்டுக்குள் நுழைந்தவாறே கேட்கிறார் ஒரு கட்சியைச் சேர்ந்த நிர்வாகி.
முகமலர்ச்சியுடன் வரவேற்ற அக்குடும்பத்தினர், ''எப்போ கவனிப்பீங்க'' என்பதைச் சூசகமாகக் கேட்டனர். அதிர்ச்சியைக் காட்டாமல், ''கவனிச்சா போச்சு... ஓட்டுக்கு ஐநுாறு நிச்சயம்'' என்கிறார் கட்சி நிர்வாகி.
மகளிர் உரிமைத்தொகையே ஆயிரம் ரூபா கொடுக்கறாங்க... ஐநுாறு எப்படிப் பத்தும்'' என்று அந்த வீட்டுப்பெண்மணி உரிமைக்குரலையே எழுப்பிவிட்டார்.
உடன் வந்த கட்சியினரும் அதிர்ந்தனர். ''கேட்டு வாங்கித் தர்றேன்'' என்று கூறிவிட்டு கட்சியினர் நடையைக் கட்டினர்.
இன்னொரு வீட்டுக்குள் காட்சி வேறு மாதிரி இருந்தது.
''ஓட்டுக் கேக்க இப்ப வர்றீங்க... அப்புறம் இந்தப்பக்கமா எட்டிக்கூடப் பார்க்க மாட்டீங்கதானே'' என்று கோபத்தை வெளிப்படுத்தினர் குடும்பத்தினர்.
''வழக்கம்போல வந்திடும்'' என்று கட்சியினர், 'ஓட்டுக்கான விலை'யைப் பேசத் துவங்கினர். ஆத்திரமுற்ற குடும்பத் தலைவி, ''எங்களைப் பாத்தா பிச்சைக்காரங்க மாதிரித் தெரியுதா உங்களுக்கு... காசு கொடுக்கிறது வெக்கமா இல்லையா'' என்று காட்டமாகப் பேசி, விரட்டியடிக்காத குறையாக, கட்சியினரை மிரளவைத்தார். 'தப்பித்தால் போதும்' என்று அந்த வீட்டை விட்டு கட்சியினர் வெளியேறினர்.
பணப்பட்டுவாடா சாத்தியமா?
தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர், ஓட்டுச்சாவடி அளவில் கட்சியினருக்கான முதல்கட்ட பணப்பட்டுவாடாவை முடித்துள்ளனர். வாக்காளர்களுக்கான பணப்பட்டுவாடா குறித்து இந்த வாரம் தான் திட்டமிடுவர்.
பறக்கும் படை, வருமான வரித்துறையினர் என கண்காணிப்பு பலமாக இருப்பது ஒருபுறம். மற்றொரு புறம், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரியில் மும்முனைப் போட்டி பலமாக இருப்பதால், பரஸ்பரம் 'போட்டுக்கொடுத்துவிடுவார்களோ' என்ற அச்சமும் மேலோங்கியிருக்கிறது.
ஊசி கீழே விழுந்தாலும்...
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரைப் பிரசாரத்தில் போட்டுத்தாக்கும் பா.ஜ.,வினர், இவர்கள் மீதான கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். கோவை உள்ளிட்ட தொகுதிகளில், ஓட்டுச்சாவடி வாரியாக மட்டுமின்றி, வீதிவாரியாகவும் கட்சியினரைப் பலப்படுத்தியிருப்பதால், இது எளிதாகச் சாத்தியமாகிறது. இதனால், 'ஊசி கீழே விழுந்தால்' கூட 'சத்தம்', பா.ஜ.,வினரின் செவிகளுக்குச் சென்றுவிடுகிறது. கொங்கு மண்டலத் தொகுதிகளில் பணப்பட்டுவாடா எளிதாக இருக்கப்போவதில்லை.
பணத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இருக்கலாம். ஆனால், ஓட்டுக்கு விலை போகாத வாக்காளர்கள், தங்களைக் காட்டிக்கொடுத்துவிட்டால் என்னாவது; முன்பு போல அவர்களை மிரட்டிவிடலாம் என்று அசட்டையாக எண்ண முடியாததால், அரசியல் கட்சியினரின் தவிப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. 'நோட்டுக்கு ஓட்டு' இனி சிரமம்தான்!

