/
வாராவாரம்
/
சித்ரா... மித்ரா ( கோவை)
/
'ஆடியோ வெடி'யால் ஆட்டம் காணும் 'மாவட்டம்': லேடி கவுன்சிலர் காட்டத்தால் 'மண்டலங்கள்' வாட்டம்!
/
'ஆடியோ வெடி'யால் ஆட்டம் காணும் 'மாவட்டம்': லேடி கவுன்சிலர் காட்டத்தால் 'மண்டலங்கள்' வாட்டம்!
'ஆடியோ வெடி'யால் ஆட்டம் காணும் 'மாவட்டம்': லேடி கவுன்சிலர் காட்டத்தால் 'மண்டலங்கள்' வாட்டம்!
'ஆடியோ வெடி'யால் ஆட்டம் காணும் 'மாவட்டம்': லேடி கவுன்சிலர் காட்டத்தால் 'மண்டலங்கள்' வாட்டம்!
UPDATED : டிச 02, 2025 07:44 AM
ADDED : டிச 02, 2025 07:35 AM

திண்ணையில் அமர்ந்து நாளிதழ்களை படித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.
காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''என்னக்கா, செம்மொழி பூங்கா திறப்பு விழாவுக்கு போயிருந்தீங்களே, விசேஷமான தகவல் இருக்கா,'' என, நோண்டினாள்.
காபியை உறிஞ்சியபடி, ''பூங்கா உருவாக்க ராப்பகலா உழைச்சவங்களை முதல்வர் பக்கத்துல விடலை. ஒப்பந்ததாரரையும், வடிவமைப்பாளரையும் கூப்பிட்டு, முதல்வர் கரங்களால் கவுரவிச்சாங்க. மாநகராட்சி அதிகாரிகள் நொந்துட்டாங்க. முதல்வர் கவனத்துக்கு போயிருக்கு. கலெக்டரையும், கமிஷனரையும் ஹோட்டலுக்கு வரச்சொல்லி பொன்னாடை போர்த்தி, சமாளிச்சாங்க,''
''இப்போ, பூங்கா பராமரிப்பு பணியை யார்ட்ட கொடுக்கறதுன்னு குழப்பமாம். பராமரிப்பு, சுத்தம் செய்தல், பாதுகாப்புன்னு மூனா பிரிச்சு டெண்டர் விடலாம்னு பேசியிருந்தாங்க. பராமரிப்பை ஆந்திரா ஒப்பந்ததாரருக்கு ஒதுக்க, மேலிடத்துல இருந்து அழுத்தமாம். சென்னை ஆபீசர் விமானத்துல வந்து சொல்லிட்டு போனாராம். பூங்கா பராமரிக்க ஆந்திரால இருந்து ஆள் வரணுமான்னு, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் குமுறிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
பதவி தப்புமா
''திமுக நிர்வாகிகள் இரண்டு பேர் பேசிக்கிற ஆடியோ, பரவுதே. உண்மை தானா... ஆளுங்கட்சில என்ன நடக்குது...'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.
''ஆடியோ நுாறு சதவீதம் உண்மைன்னு கட்சிகாரங்க சொல்றாங்க. உள்ளாட்சி தேர்தல் நடந்தப்ப, கோவைப்புதுார் 90வது வார்டுக்கு, நிர்வாகிகளுக்குள்ள போட்டி வந்துருக்கு. 'செல்வாக்கை' காட்டி, 'சீட்' வாங்குனவரு தேர்தல்ல தோத்துட்டாரு; அதிமுக ஜெயிச்சிடுச்சு.
இதுக்கு முன்னாடி, அவரோட மனைவிக்கு 'சீட்' வாங்கிருக்காரு; அவுங்களும் தோத்துட்டாங்களாம். இரண்டு தடவை வாய்ப்பு கொடுத்தும் தோத்தவருக்கு இப்போ, 'பகுதி கழகம்' பதவி கொடுத்ததுனால, உடன்பிறப்புகள் கொந்தளிக்கிறாங்க''
''அதிமுகல இருந்து வந்தவருக்கு பதவி கொடுத்திருக்கீங்களே'ன்னு, கவுன்சிலர் 'சீட்' கிடைக்காத வார்டு செயலாளர் ஒருத்தரு, 'மாவட்டத்திடம்' கேட்ருக்காரு. அவரோ, 'அப்டிலாம் பாக்க முடியாது. செந்தில்பாலாஜி கூட அங்க இருந்து வந்தவரு தான். கட்சிக்காக வேலை செய்யுங்க; இல்லேன்னா விட்ருங்க'னு சொல்லிட்டாராம்''
''பகுதி கழக பதவி கிடைக்காதவர் கையில ஆடியோ கிடைச்சிருக்கு. சமூக வலைதளத்துல வெளியிட்டுட்டாரு. கட்சிகாரங்க மத்தில பத்திகிச்சு. தலைமைக்கும் தெரிஞ்சிருக்கும். பகுதி கழகத்தை மாத்துவாங்களா, ஆடியோவுல பேசுனவங்க, வைரலாக்குனவங்க மேல நடவடிக்கை எடுப்பாங்களா, 'மாவட்டம்' பதவி பறிபோகுமான்னு பட்டிமன்றம் ஓடிட்டு இருக்கு,'' என்றபடி, நகர் வலம் செல்ல தயாரானாள் சித்ரா.
லேப்-டாப் பையுடன் புறப்பட்ட மித்ரா, ''செங்கோட்டையனை வரவேற்க ஏர்போர்ட்ல ஏகப்பட்ட கூட்டமாமே...'' என்றாள்.
''ஆமா, மித்து! நானும் போயிருந்தேன். காலையில இருந்து த.வெ.க.காரங்க வர ஆரம்பிச்சாங்க. பிளைட் தாமதமானதால சாயங்காலந்தான் செங்கோட்டையன் வந்தாரு. அதுக்குள்ள ஏகப்பட்ட பேரு கூடிட்டாங்க. அப்போ, அதிமுகவோட பொள்ளாச்சிக்காரர் ஏர்போர்ட்டுக்கு வந்தாரு. த.வெ.க.காரங்க, 'அண்ணா... நீங்களும் இங்க வந்துருங்க'னு கோஷம் போட்ருக்காங்க. சுதாரிச்ச அவரு, சட்டுன்னு கிளம்பிட்டாரு. அத பாத்து ஆரவாரமா கத்துனாங்க. செங்கோட்டையனுக்கு கிடைச்ச வரவேற்ப பாத்து, அதிமுக, திமுக ரெண்டுலயும் மிரண்டு போயிருக்காங்க.''
ஜெயிக்கிறதுக்கு இலக்கு
''மேட்டுப்பாளையத்துல ஜெயிச்சாகணும்னு ஆளுங்கட்சி குறி வச்சிருக்காமே...''
''ஆமாப்பா! அதிமுக கோட்டைங்கறதால இ.பி.எஸ். அங்க பிரசாரத்த துவக்குனாரு. அதனாலயே, அங்க அதிமுகவ தோற்கடிச்சாகணும்னு, மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கறாரா சொல்லியிருக்காராம்.''
''ஆனா, ஆளுங்கட்சியில மூத்தவங்க பலரும் அதிருப்தில, இருக்காங்கன்னு கேள்விப்பட்டேனே...''
''மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வினோட கணவர் அசரப் அலியை, நகர வடக்கு செயலாளரா நியமிச்சிருக்காங்க. இப்போ, பர்வீனுக்கு வக்ப் வாரிய உறுப்பினர் பதவியும் கொடுத்திருக்காங்க. ஒரே தம்பதிக்கு 3 பதவியானு சீனியர்கள் மத்தில புகைச்சல்''
கோபம், கண்ணீர
''கோவை மாநகராட்சில திமுக பெண் கவுன்சிலர் கோபமா பேசுனாங்களாமே...''
''அவுங்க வார்டுல முதல்வர் படைப்பகம், ஆரம்ப சுகாதார நிலையம் கட்றதுக்கு பூமி பூஜை போட்டாங்க. இதுவரைக்கும் வேலை நடக்கலை. 'ஏன் நடக்கலை'னு கேட்டாங்க. அதுக்கு அவங்க கட்சிக்காரங்களே கொதிச்சுட்டாங்க. ஆளுங்கட்சில இருந்துக்கிட்டு எதிர்க்கட்சி ஆள் மாதிரி கேட்கறதா?னு குதிச்சாங்க,''
''மண்டல தலைவர் மீனாவும், கவுன்சிலர் பேபி சுதாவும் நேருக்கு நேரா திட்டி தீர்த்துட்டாங்க. விக்டோரியா ஹாலுக்கு வெளியேவும் மோதிருக்காங்க. 'மண்டல தலைவர்கள் நாலு பேரும் என்னென்ன பண்றீங்கன்னு தெரியும்'னு சொன்னாங்களாம். அதனால, மண்டல தலைவர்கள் அத்தனை பேரும் டென்சன்ல இருக்காங்க,''
''குறிச்சிய சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் சரளா வார்டுல, சாக்கடை தேங்குது. 'பகுதி கழகம்' செல்வாக்க காட்டி, கான்கிரீட் சுவர் எழுப்பி, தடுக்கிறாராம். இதை மன்றத்துல பேசுனாங்க. யாருமே காது கொடுத்து கேட்காததால, மக்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையேனு அழுதபடி போனாங்களாம்''
'மாஜி'யின் களேபரம்
''முன்னாள் கவுன்சிலர் ஒருத்தரு, 'டியூகாஸ்' கூட்டுறவு சங்கத்துல களேபரம் பண்றாராம்... அவர பார்த்தாலே ஆபீசர்களுக்கு உதறல் எடுக்குதாமே...''
''அந்த சங்கத்துல எப்பவுமே பிரச்னை தான். 10 வருஷம் முன்னாடி துணை தலைவரா இருந்த முன்னாள் கவுன்சிலர், 'டியூகாஸ்' சங்கம் கூட்டுறவு துறைக்கோ, அரசுக்கோ கட்டுப்பட்டது கிடையாது. உறுப்பினர்கள் சொல்றதையே அதிகாரிகள் கேட்கணும்'னு சொல்றாராம். உறுப்பினர்கள் சிலரை அழைச்சிட்டு வந்து, அலுவலகத்துக்குள்ள இடம் ஒதுக்கணும்னு வம்படியா கேக்குறாராம்.”
'' அவரோட அலப்பறையால, எல்லாரும் சங்கடத்தோட வேலை செய்றாங்களாம். எதுக்கு வம்புனு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க யோசிக்கிறாங்களாம்,'' என்றபடி, ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.
வன ஆர்வலர்கள் கோபம்
பின்னால் அமர்ந்த மித்ரா, ''ரோலக்ஸ் யானை இறந்ததுனால, வனத்துறை மேல வன ஆர்வலர்கள் கோபத்துல இருக்காங்களாமே...'' என கேட்டாள்.
''ஏகப்பட்ட யானைகள் இறந்துடுச்சு. வனத்துறை ஏதாச்சும் சப்பை காரணம் சொல்றாங்களே தவிர, நடவடிக்கை எடுக்கறதில்லை. அரசும் விசாரணை நடத்றதில்லைனு கோபம் அவுங்களுக்கு. ஏன்னா, மயக்க ஊசி செலுத்தி பிடிச்ச ரோலக்ஸ் யானைக்கு, 'ரேடியோ காலர்' பொருத்தி காட்ல விட்டாங்க. இதே மாதிரி, வரையாட்டுக்கு ரேடியோ காலர் பொருத்தினப்ப அது இறந்துடுச்சு.
அதுக்கு முன்னாடி, உடல் நலம் பாதித்த தாய் யானையை அவுங்களால காப்பாத்த முடியலை. குட்டி யானைய தவறா கையாண்டதால, காட்டு யானைகள் அதை திரும்ப சேர்த்துக்கலை. அதை முகாமுக்கு அனுப்புனாங்க. முன்னாடி, ராதாகிருஷ்ணன் இறந்துச்சு; இப்போ, ரோலக்ஸ்''
''வனத்துறையின் மெத்தனம் வெளிச்சத்துக்கு வந்தும், அரசு நடவடிக்கை எடுக்கல. தொடர்ச்சியா யானைகள் இறந்துட்டே வருதேன்னு, அரசுக்கு ஏன் சந்தேகம் வரலைங்கிறதே சந்தேகமா இருக்கு. விசாரணையாவது வேண்டாமான்னு கேக்குறாங்க. மத்திய அரசு தலையிடணும்னு எதிர்பார்க்குறாங்க''
''இப்பல்லாம் போலீஸ் என்கவுன்டர் அதிகமாயிருச்சே...''
''குற்றங்கள் அதிகமாயிருச்சு. குற்றவாளிகளுக்கு பயம் வரணும்னு இப்படி சீன் போடுறாங்க. நிஜமான என்கவுன்டரே இல்லை; பிடிச்சுட்டுப் போயி, முழங்காலுக்கு கீழே சுடுறாங்க. சுட்டு பிடிச்சதா சொல்லி, கெத்து காட்றாங்கனு சொல்றாங்க. கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் திருட்டுல சிக்குன வடமாநில ஆளுங்கள, ரொம்ப பக்கத்துல நின்னு சுட்டதுனால, ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்குன்னு, போலீஸ் தரப்பிலேயே சொல்றாங்க,'' என்றபடி, கலெக்டர் ஆபீசை நோக்கி ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

