/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
இன்றும் செல்லத்தக்கதாகும் பஞ்சாயத்து அனுமதி
/
இன்றும் செல்லத்தக்கதாகும் பஞ்சாயத்து அனுமதி
ADDED : மார் 07, 2025 08:37 PM
கோவை மாவட்டம், பேரூர் ரோடு, செல்வபுரம் பகுதியில் மெயின் ரோட்டில் இருந்து முக்கால் கி.மீ., உட்புறம் ராஜம் லே-அவுட், அண்ணன் தம்பி நகரில், மேற்கு பார்த்த, 30 அடி வழித்தடத்தில், 5.5 சென்ட் இடம் விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
-பாபு, கோவை.
தாங்கள் கூறியுள்ள இடம், தங்கப்பட்டறை மற்றும் நிறுவன முதலாளிகளும் கலந்து வசிக்கும் இடமாகும். இந்த இடமானது நகரத்தில் இருந்து, 45 மீ., துாரத்தில் உள்ளது. இந்த இடத்தில் நான்கு போர்ஷன், 2 பி.எச்.கே., வீடுகள் கட்டினால் வாடகை கிடைக்கும். அதை கருத்தில் கொண்டு பார்த்தால், சென்ட் ரூ.15 லட்சத்துக்கு வாங்கலாம்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி டவுன் பகுதியில் கோத்தகிரி ரோடு அருகே ஆரணி பகுதியில், 5 சென்ட் இடமும், தரைதளம், முதல் தளம் சேர்த்து, 3,000 சதுரடி, நான்கு போர்ஷன் வீடு(தற்போது காட்டேஜ் ஆக உள்ளது) என்ன விலை கொடுத்து வாங்கலாம்?
-மணிபாலாஜி, ஊட்டி.
இந்த இடமானது ஊட்டி சேரிங் கிராசில் இருந்து, 1.5 கி.மீ., துாரத்தில் உள்ளது. அது மட்டுமின்றி, சுற்றிலும் காட்டேஜ்கள் உள்ளன. சீசன் மற்றும் அரை சீசன்களில், அறை ஒன்றிற்கு ரூ.2,000 முதல், 4,000 வரை வீதம் கணக்கிட்டு பார்த்தால், இதன் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகா, ஜான்சன் ஸ்கொயர் பகுதியில், கோடநாடு செல்லும் வழியில் ரோட்டின் மேற்புறமாக, 15 அடி தடத்தில், 20 சென்ட் காலியிடம் விற்பனைக்கு வருகிறது. என்ன விலை கொடுக்கலாம்?
-பிலோமினா, கோத்தகிரி.
தாங்கள் கூறியுள்ள இடமானது, கோத்தகிரி டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்டது. கோத்தகிரி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் குடியிருப்பு பகுதியாக இருக்கிறது. சற்றே செங்குத்தாகவும், படிக்கட்டுகளும் இருப்பதால் அங்குள்ள சூழ்நிலையை பொறுத்து, ஒரு சென்ட் ரூ.7.5 லட்சம் ஆகும்.
நான் பெரியநாயக்கன்பாளையம் அருகே, ஒரு அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனையை வாங்கி, பஞ்சாயத்திடம் கட்டட அனுமதி பெற்று வீடு கட்டியுள்ளேன். சொத்து வரி, குடிநீர் கட்டணம் என அனைத்தையும் முறையாக கட்டி வருகிறேன். தற்போது, வீட்டை விற்க எண்ணியுள்ளேன். வாங்க வருபவர்கள், லே-அவுட் அனுமதி உள்ளதா என கேட்கின்றனர். அனுமதி இல்லாத மனைப்பிரிவை எவ்வாறு அப்ரூவல் செய்து வீட்டை விற்பது?
- அலெக்ஸ் பாண்டியன், கோவை.
வீட்டுக்கான பஞ்சாயத்து கட்டட அப்ரூவல், வீட்டு வரி ரசீது, தண்ணீர் கட்டண ரசீது, மின் கட்டண ரசீது போன்றவை தேவையான தொகுப்பாகும். 35 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய சட்டங்கள் இல்லை. பொதுவாக பஞ்சாயத்து என்பது உள்ளூர் அதிகாரம் ஆகும். அன்றைய காலகட்டத்தில், கட்டட அனுமதி அளிக்க அதிகாரம் பெற்றதாக இருந்தது. எனவே, பஞ்சாயத்து கட்டட அனுமதி இன்றும் செல்லத்தக்கதே. விலையை குறைப்பதற்காக வாங்க வருபவர்கள், தரகர்கள் சொல்லும் உத்தியாகத்தான், இதை பார்க்க வேண்டும்.
-தகவல்: ஆர்.எம்.மயிலேரு,
கன்சல்டிங் இன்ஜினியர்.

