ADDED : மே 02, 2025 09:19 PM

பிரீ காஸ்ட் கான்கிரீட் முறையில், தனி வீடுகள் கட்டலாம் என்று கூறுகிறார்கள். செலவு அதிகம் ஆகுமா? உங்கள் ஆலோசனை என்ன?
-சுந்தர், சேரன் மாநகர்.
பிரீ காஸ்ட் கான்கிரீட் கட்டுமான முறை, பொதுவாக சில காலம் முன்பு வரை சுற்றுப்புற சுவர், ரோடு தடுப்பு சுவர், சேம்பர் கவர் சிலாப் போன்றவற்றிற்கும், தற்போது மிகப் பெரிய அளவில் பால வேலைகள், பெரிய பட்ஜெட் உள் கட்டமைப்பு கட்டுமானம் மற்றும் அடுக்குமாடி கட்டுமானங்களிலும், உபயோகப்பட்டு வருகிறது.
தற்போது தனி வீடு கட்டுமானத்திலும், உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். இக்கட்டுமானம் மூலம் நேர சேமிப்பு, தரக்கட்டுப்பாடு, பணியாளர் குறைவு போன்ற பலன்கள் இருந்தாலும், குறுகலான போக்குவரத்து நிறைந்த இடங்களில், செயல்படுத்துவது கடினம். பெரிய விசாலமான மனைகளிலும், போக்குவரத்து பிரச்னைகள் இல்லாத இடத்திலும், தாராளமாக செயல்படுத்தலாம். ஆனால், முறையான திட்டமிடல் அவசியம். பிளானை பணியின் நடுவில் மாற்றாமல் இருந்தால் செலவு மற்றும் நேரம் மிச்சமாக வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த வகை தனி வீடு கட்டுமானம், தற்போது துவக்க நிலையிலே உள்ளது. பொறியாளர் ஆலோசனையுடன் செய்யவும்.
எங்கள் அபார்ட்மென்ட் கீழ்தளத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் எபாக்ஸி புளோரிங் அமைக்கலாமா?
- மது சர்மா, ஆர்.எஸ்.புரம்.
கார் பார்க்கிங் பகுதி போன்ற அதிக போக்குவரத்து இடங்களில் எபாக்ஸி புளோரிங் தாராளமாக உபயோகிக்கலாம். சாதாரணமாக இது வழுக்காது. எளிதாக சுத்தம் செய்யலாம்; 20 ஆண்டுகள் வரை உழைக்கும். நிறைய கவர்ச்சியான வண்ணங்களில் கிடைக்கும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். எனினும் சாதாரண எபாக்ஸி மேல், நீர் படலம் படர்ந்தால் சிறிது வழுக்கலாக மாறலாம். அதற்கென உள்ள பிரத்யேக எபாக்ஸி பொறியாளரை, கலந்தாலோசித்து உபயோகிக்கவும்.
முன்பெல்லாம் கதவு நிலவு உயரம், 7 அடி மட்டுமே இருந்தது. தற்போது, 8 அடி வரை உபயோகிப்பதை பார்க்கிறேன். இதன் பலன்கள் என்ன?
-சிவகுமார், காங்கயம்பாளையம்.
குடியிருப்பு வீடுகளைப் பொறுத்தவரை, 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன், முகப்பு கதவு மற்றும் அறைக்கதவுகள், 6 அடி உயரம் மற்றும் அதற்கும் குறைவாக மட்டுமே இருந்தன. குனிந்துதான் வீட்டிற்குள் செல்லவேண்டிய சூழல் அப்போது இருந்தது. அதன் பின்பு(நீண்ட காலத்திற்கு), 7 அடி உயரம் சராசரியாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
தற்போது, 8 முதல், 10 அடி வரை கதவுகள் வைக்கின்றோம். கதவு தயாரிக்கும் பேக்டரியில்கூட இதே உயரத்தில் ரெடிமேட் கதவுகள் தயாரிக்கப்படுகின்றன. காரணம் காலத்துக்கு ஏற்ப மாறிகொண்டிருக்கும் அழகுணர்ச்சி, பிரம்மாண்டமான தோற்றம் மற்றும் நவீன பாதுகாப்பான புல்லட் பூட்டுகள், நீண்ட தாழ்ப்பாள்கள், நல்ல காற்றோட்டம் போன்றவையே. நீங்களும் விருப்பப்பட்டால், 8 அடி உயர கதவுகள் பயன்படுத்தலாம். அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
எனது வீட்டில், பிரஷர் பூஸ்டர் பம்ப் பயன்படுத்தியதால் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. பின்புறம் உள்ள சுவர்களில் பெயின்ட் உதிர்ந்து விட்டது. சுவர் பாதிக்கப்படுமா?
-பன்னீர் செல்வம், பேரூர்.
தரம் குறைந்த பைப் மற்றும் பிட்டிங் அல்லது பிரஷர் சோதனை முறையாக செய்யாத பணிகள் மூலம் இக்கசிவு ஏற்பட்டிருக்கும். உடனடியாக, ஏற்கெனவே உள்ள பைப் மற்றும் பிட்டிங்குகளை மாற்றி, தரமான பிளம்பரை வைத்து செய்தால் இதனை சரி செய்துவிடலாம்.
பூஸ்டர் பம்ப்கள் மூலம் அனைத்து பைப்புகளிலும், சீரான நீர் வருதல் மற்றும் ஷவர் குளியல்களில் நிறைவான நீர் வெளியேற்றம் போன்ற பலன்கள் உள்ளன. தகுந்த ஆலோசனை பெற்று செய்யவும்.
-பொறியாளர் செவ்வேள்
துணைத் தலைவர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம்(காட்சியா)
