வீடு கட்டும்போது பீம் அமைப்பதில் செலவை குறைக்க நினைக்காதீர்!
வீடு கட்டும்போது பீம் அமைப்பதில் செலவை குறைக்க நினைக்காதீர்!
ADDED : மார் 07, 2026 08:14 AM

தமிழகத்தில் ஒரு காலத்தி ல் கடைக்கால் போட்டு, அதில் கருங்கல் சுவர் எழுப்பி, தரைமட்ட உயரம் முடிவு செய்யப்படும். தரைமட்டத்தில் இருந்து செங்கல் சுவர் கட்டி அதன் மேல் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த முறையில் கட்டடம் கட்டுவது லோடு பேரிங் என்று குறிப்பிடப்படுகிறது, இதில் மேல் தளத்தின் சுமை சுவர் வழியாக இறங்கி பரவலாகும். ஆனால், இதில் கட்டடத்தின் உயரத்தை அதிக உயரத்துக்கு கொண்டு செல்ல முடியாது என்று கூறப்படுகிறது.
ஆனால், தற்போது கட்டடத்தின் சுமையை குறைக்க வேண்டும், உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தேவை எழுந்துள்ளது. இதனால், அஸ்திவார துாண்கள் அமைத்து அதை பீம்கள் வாயிலாக இணைத்து அதன் மேல் தளம் அமைக்கும் பிரேம்டு ஸ்டிரக்ட்சர்' முறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த முறையில் கட்டடம் கட்டும் முன், கட்டட அமைப்பியல் பொறியாளர் பரிந்துறை அடிப்படையில் துாண்கள், பீம்களுக்கான எண்ணிக்கை, வடிவமைப்பு இறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக, எந்தெந்த இடத்தில் துாண்கள் அமைய வேண்டும் என்பதில் மக்கள் கவனம் செலுத்துகின்றனர்.
ஆனால், துாண்களை இணைக்கும் வகையிலான பீம்கள் எங்கு எப்படி அமைய வேண்டும் என்பதில் மக்கள் கவன குறைவாக செயல்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, போதிய அனுபவம் இல்லாத பொறியாளர்கள், பணியாளர்கள் கட்டுமான செலவை குறைக்க பீம்களில் சிக்கனம் பார்க்கின்றனர்.
பொதுவாக ஒரு கட்டடம் கட்டும் போது, தரை மட்டத்தின் பிளிந்த் பீம், டை பீம், சில்லெவல் பீம், லிண்டல் பீம், ரூப் பீம் ஆகிய ஐந்து நிலைகளில் பீம்கள் அமைய வேண்டும். தரைதள கட்டடத்தில் இந்த ஐந்து வகை பீம் அமைப்பதில் எதையும் விட்டுவிடாமல் கவனமாக செயல்பட வேண்டும்.
இதில் அஸ்திவாரத்துக்கு மேல் தரைமட்டத்தில் பிளிந்த் பீம் அமைக்க வேண்டும் அதன் மேல் ஜன்னல் வருவதற்கு முன் டை பீம் அமைக்க வேண்டும். ஜன்னல்கள் அமையும் இடங்களில் சில்லெவல் பீம் அமைக்க வேண்டும், ஜன்னலுக்கு மேல், பரன் அமையும் இடங்களில் லிண்டல் பீம்கள் அமைவது அவசியம்.
லிண்டல் நிலை வரை சரியாக பீம்கள் அமைத்தவர்கள், தளம் அமைக்கும் இடத்துக்கு முன் ரூப் லெவல் பீம் அமைப்பதை தவிர்க்கின்றனர். இதனால், குறிப்பிட்ட அளவுக்கு கட்டுமான செலவை குறைக்கலாம் என்று தவறான ஆலோசனை அடிப்படையில் மக்கள் தவறு செய்கின்றனர்.
இவ்வாறு பீம் அமைப்பதில் ஏதாவது ஒரு நிலை விடுபட்டாலும் அது கட்டடத்தின் உறுதி தன்மையை கடுமையாக பாதிக்கும். புதிதாக வீடு கட்டும் போது அதில், எந்த நிலையிலும் பீம்கள் விடுபடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டடுமான பொறியாளர்கள்.
ஒரு கட்டடம் கட்டும் போது, தரை மட்டத்தில் பிளிந்த் பீம், டை பீம், சில்லெவல் பீம், லிண்டல் பீம், ரூப் பீம் ஆகிய ஐந்து நிலைகளில் பீம்கள் அமைய வேண்டும்.
