வீடுகளில் செப்டிக் டேங்க் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் !
வீடுகளில் செப்டிக் டேங்க் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் !
ADDED : ஜூலை 11, 2026 06:41 AM

தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி நாட்டின் பிற மாநிலங்களை விட மிக அதிகமாக உள்ளது. ஆனால், நகர்ப்புற வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. நகரங்கள் வேகமாக வளர்ந்து வரும் அளவுக்கு கழிவு நீர் வடிகால் வசதி களில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இன்றும் பெரும்பலான நகரங்களில், பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது என்பதை மறுக்க முடியாது. சென்னை போன்ற சில நகரங்களில் மட்டுமே பாதாள சாக்கடை வசதிகள் உள்ளன, இவற்றை ஒட்டிய சிறிய நகரங்களில் பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்படவில்லை.
இதனால், பாதாள சாக்கடை வசதி இல்லாத பகுதிகளில் செப்டிக் டேங்க் அமைத்து தான் மக்கள் கழிவு நீரை வெளியேற்ற வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக, நீங்கள் புதிதாக வீடு கட்டும் முன் அப்பகுதியில் பாதாள சாக்கடை வடிகால் அமைப்பு உள்ளதா என்று பாருங்கள்.
பாதாள சாக்கடை வசதி இல்லாத இடத்தில் வீடு கட்டுவதாக இருந்தால், அங்கு கழிவு நீரை சேகரிக்க செப்டிக் டேங்க் அமைக்க வேண்டும். ஒரு காலத்தில் குறிப்பிட்ட அளவு ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, அதில், கான்கிரீட் பயன்படுத்தி தொட்டி கட்டுவது வழக்கமாக இருந்தது.
இதில் சேகரிக்கப்படும் கழிவு நீரை லாரிகள் வாயிலாக குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்புறப்படுத்தும் நடைமுறை இருந்தது. ஆனால், தற்போது, செப்டிக் டேங்க் அமைக்கும் போதே அதில் குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்வதால், கழிவு நீரில் வரும் கசடுகளை முறையாக மேலாண்மை செய்ய வழி ஏற்படுகிறது.
குறிப்பாக, உயிரி தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பூர்வ வழிமுறைகளை பயன்படுத்தினால், கழிவு நீர் தொட்டியை மிகவும் சுகாதாரமான முறையில் மேலாண்மை செய்ய முடியும். பொதுவாக ஒரு இடத்தில் செப்டிக் டேங்க் அமைக்கும் போது, நிலத்தின் அடிப்படை தன்மையை ஆராய வேண்டும்.
அங்கு பள்ளம் தோண்டி, தரை அமைத்து அதில் சுவர் எழுப்புவது என்பதற்கு பதிலாக தற்போது ரெடிமேட் கான்கிரீட் தொட்டிகள் வந்துவிட்டன. ஒரு லிட்டருக்கு இவ்வளவு என்று கொள்ளளவு அடிப்படையில் இதற்கான விலையை விசாரித்து தொட்டிகளை வாங்கி பயன்படுத்தலாம்.
பள்ளம் தோண்டி அதன் அடி பாகம், பக்கவாட்டு பகுதிகளை சீரமைத்தால் போதும், ரெடிமேட் தொட்டிகளை கொண்டு வந்து அங்கு பொருத்தி கொடுப்பதற்கு நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதில் கழிவுகளை உயிரி தொழில்நுட்ப மருந்துகளை பயன்படுத்தி அழிப்பதற்கான வடிவமைப்பு கடைப் பிடிக்கப்படுகிறது.
வீடுகளில் செப்டிக் டேங்க் அமைக்க வேண்டிய நிலையில் இது போன்ற வழிமுறைகளை கடைப்பிடித்தால் பல்வேறு நிலைகளில் பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
உயிரி தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பூர்வ வழிமுறைகளை பயன்படுத்தினால், கழிவு நீர் தொட்டியை மிகவும் சுகாதாரமான முறையில் மேலாண்மை செய்ய முடியும்.
