/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
குடியிருப்போர் நலச்சங்கம் கட்டாயம் வேண்டும்
/
குடியிருப்போர் நலச்சங்கம் கட்டாயம் வேண்டும்
ADDED : ஜன 24, 2025 11:05 PM

அடுக்குமாடி மற்றும் லே அவுட் குடியிருப்புகளிலுள்ள பொதுவான அடிப்படை வசதிகளை நிர்வகிக்கவும், பராமரிக்கவும்  ஒரு சட்டபூர்வமான அமைப்பு தான் குடியிருப்போர் சங்கம்.
இதுபற்றி விளக்குகிறார், பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்க (கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம்.
சங்கம் வாயிலாக, ஒரு வெளிப்படை தன்மை, நேர்மை, தனி மனித உரிமை, சொத்துரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்தலாம். அடுக்குமாடி குடியிருப்பை பொறுத்தவரை, தமிழ்நாடு அடுக்குமாடி சொத்துரிமை சட்டம் 2022, விதிகள் 2024 படி, சங்கம் அமைத்துக்கொள்ளலாம். குடியிருப்பவர்களின் உரிமையை மீட்க, குடியிருப்போர் சங்கம் அவசியமானது.
லே அவுட் என்பது தனி சைட், குடியிருப்புகளை கொண்டது. ஒவ்வொன்றின் உரிமையாளர் ஒருவரே. அதனால் சைட் பராமரிப்பு முழுமையும் ஒருவரையே  சார்ந்தது.
சாலை, பூங்கா திறவிடம், மேல் நிலை நீர் தொட்டி போன்ற பொது பயன்பாடு இடங்கள் உள்ளாட்சிக்கு தானம் கொடுக்கப்பட்டு, அதன் பராமரிப்பில் இருக்கும்.
இதை தவிர்த்து, கிளப், நீச்சல் குளம், ஜிம், குழந்தைகள் விளையாட்டு திடல் போன்ற பொதுவான சிறப்பு வசதிகளை, லே அவுட் விற்பனையாளர் மனை வாங்குபவர்களுக்கு அளிப்பதுண்டு. பொதுவாக, இவை அனைத்தும் விற்பனையாளரின் பெயரிலேயே இருக்கும்.
மாற்று ஏற்பாடாக, இந்த சிறப்பு வசதிகளை பராமரிக்கும் உரிமையை, உரிமையாளர் மனை வாங்குபவர்களுக்கு அளிக்கலாம்.
அதை ஏற்கும் பட்சத்தில், நிர்வாகம்,பராமரிப்பு செலவை பகிர்ந்து கொள்வது எப்படி என்பதற்காக ஒரு சங்கம் அமைக்கலாம்.
இச்சங்கத்தை, தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம், 1975ன்  கீழ் பதிவு செய்ய வேண்டும். குறைந்தது ஏழு உறுப்பினர்கள் தேவை. சங்கத்தின் நோக்கங்கள், விதிமுறைகளை கவனமாக இறுதி செய்ய வேண்டும்.
திறவிடத்தில் எவ்வித கட்டுமானமும் கூடாது. உள்ளாட்சி விதிகளுக்கு முரணாக விதிகள் அமையக்கூடாது, நிர்வாகம் செய்ய தலைவர், செயலர், பொருளாளர் அவசியம்.
அவர்களின் கடமைகள் சொல்லப்பட வேண்டும்.
பராமரிப்பு செலவுகளை சமாளிக்க, நிதி ஆதாரத்தை ஏற்படுத்தும் வழிகளை குறிப்பிடவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

