/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
மகளிர் பெயரில் வீடு, மனை: குவியும் சலுகைகள்!
/
மகளிர் பெயரில் வீடு, மனை: குவியும் சலுகைகள்!
ADDED : ஏப் 27, 2024 08:05 AM

வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது, யார் பெயரில் பதிவு செய்வது என்ற கேள்வி எழுவது இயல்பான ஒன்று தான். மாத ஊதியத்தை அடிப்படை ஆதாரமாக நம்பி இருக்கும் குடும்பங்களில் இத்தகைய கேள்வி எழும் நிலையில், அதில் சம்பாதிக்கும் நபர் பெயர் தான் முதலில், முன்னுரிமை பெறும்.
ஆனால், தற்போதைய சூழலில் பெரும்பாலான குடும்பங்களில் ஆண், பெண் இருவரும் சம்பாதிக்கும் நிலையில், பெண்கள் பெயரில் சொத்து வாங்குவது பரவலாக அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் வேலைக்கு செல்லாத மனைவி பெயரில் சொத்து வாங்குவதும் பெரும்பாலான குடும்பங்களில் வழக்கத்தில் இருந்துள்ளது.
இது அந்தந்த குடும்பங்களில் பழக்கம், விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது, அரசு தரப்பிலும், வங்கிகள் தரப்பிலும் பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் வீடு என்ற அடிப்படையில் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், பெண்கள் பெயரில் சொத்து இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. இதனால், அரசின் நிதி உதவியை முழுமையாக பெற நினைக்கும் குடும்பங்கள், பெண்கள் பெயரில் சொத்தை பதிவு செய்ய முன்வருகின்றன.
இதை தொடர்ந்து தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில் புதிதாக வீடு ஒதுக்கும் போது, சம்பந்தப்பட்ட குடும்பத்தில் உள்ள பெண்கள் பெயரில் தான் உத்தரவு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், பெண் இல்லாமல், ஆண் தனியாக அரசு வீட்டை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு துறைகள் வீடு வழங்கும் போது மட்டும் என்று இல்லாமல், தற்போது பெரும்பாலான வங்கிகள், வீட்டுவசதி நிதி நிறுவனங்களும் பெண்கள் பெயரில் தான் கடன் கொடுக்க விரும்புகின்றன. இதற்காக, சொத்து பெண்ணின் பெயரில் வாங்கப்படும் நிலையில் அதற்கான வீட்டுக்கடன் வழங்குவதில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
குறிப்பாக, பெண்ணின் பெயரில் வாங்கப்படும் சொத்துக்கான வீட்டுக்கடனில் வட்டி விகிதங்கள் கூடுதலாக அளிக்கப்படும். கடன் தொடர்பான பிராசசிங் பணிகளுக்கான கட்டணத்திலும் பெருமளவு தொகை தள்ளுபடி செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
குடும்பத்தில் பெண்கள் பெயரில் சொத்து இருந்தால், அது அவர்களுக்கு ஒரு மதிப்பை ஏற்படுத்துவதுடன், கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கும் என்று கருதப்படுகிறது. பெண்ணின் பெயரில் சொத்து இருந்தால், அது பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதே நேரம் பெண்ணின் பெயரில் வாங்கப்படும் சொத்து தொடர்பான நிர்வாகத்தில் மற்றவர்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது விஷயத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.

