/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
ரெடிமிக்ஸ் கான்கிரீட் பயன்படுத்துவதிலும் கவனிக்க வேண்டியவை!
/
ரெடிமிக்ஸ் கான்கிரீட் பயன்படுத்துவதிலும் கவனிக்க வேண்டியவை!
ரெடிமிக்ஸ் கான்கிரீட் பயன்படுத்துவதிலும் கவனிக்க வேண்டியவை!
ரெடிமிக்ஸ் கான்கிரீட் பயன்படுத்துவதிலும் கவனிக்க வேண்டியவை!
ADDED : செப் 15, 2024 08:37 AM

தமிழகத்தில் சில ஆண்டுகள் முன்பு வரை பெரிய அளவிலான அரசின் கட்டுமான திட்டங்களில் தான் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது இந்த நிலை முற்றிலுமாக மாறியுள்ளதால், அனைத்து வகை பணிகளுக்கும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் எந்தெந்த நிலையில் எவ்வளவு கான்கிரீட் கலவை தேவைப்படும் என்பதை முதலிலேயே மதிப்பீடு செய்ய வேண்டும்.
இந்த பணிகளுக்கு வழக்கமான முறையில் சிமென்ட், மணல், ஜல்லி, கம்பி ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட வேண்டும்.
இதற்கு ஆகும் செலவு என்ன, பணிகள் முடிவதற்கு ஆகும் நேரம் என்ன, பணியாளர்கள் தேவை என்ன ஆகிய விபரங்களையும் கணக்கு பார்க்க வேண்டும்.
இந்த விபரங்களுடன் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டை வாங்குவதற்கான செலவை ஒப்பிட்டு பார்த்தால், அதன் பயன் என்ன என்பது உங்களுக்கு தெளிவாக தெரிந்துவிடும். கட்டுமான பொருட்களுக்கான செலவு மட்டுமல்ல, பணிக்கான கால நேர பயன்பாட்டிலும் ரெடிமிக்ஸ் கலவைகள் மிகுந்த பயனுள்ள மாற்றாக அமைந்துள்ளன.
தமிழகம் முழுதும், தற்போதைய நிலவரப்படி, 300க்கும் மேற்பட்ட ரெடிமிக்ஸ் ஆலைகள் வந்துவிட்டன.
இந்நிலையில், கட்டுமானத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப ரெடிமிக்ஸ் தயாரிப்புகளிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. குறிப்பாக, என்ன வகையான பணி என்று கூறப்படுகிறதோ அதற்கு ஏற்ற கான்கிரீட் கலவை அளிக்கப்படுவது வழக்கம்.
இதில் சில பணிகள் பிரிக்கப்பட்டு, மதிப்பு கூட்டப்பட்ட சேவையாக கூடுதல் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கட்டுமான திட்டத்தின் அளவு மற்றும் தேவையைப் பொறுத்து அங்கேயே தற்காலிக ஆலை அமைத்து கான்கிரீட் கலவை தயாரித்து வழங்கப்படுகிறது.
வெகு தொலைவில் உள்ள ஆலையில் தயாரித்து, கொண்டுவருவதற்கு பதிலாக, கட்டுமான திட்ட பகுதியிலேயே, சிறிய மிக்சர் இயந்திரம் அமைத்து கலவை தயாரிக்கப் படுகிறது. கட்டுமான திட்ட பகுதியிலேயே தயாரிக்கப்படுவதால் கலவை வீணாவது தவிர்க்கப்படுகிறது.
உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியின் அளவை பொறுத்து சிறிய ரக வாகனங்கள் வாயிலாகவும் ரெடிமிக்ஸ் கலவை வழங்க தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதில், மக்களின் தேவைக்கு ஏற்ப சேவைகள் வழங்கப்படுவதால் இதற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.