/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் யு.டி.எஸ்., ஒதுக்கீட்டில் கவனம் தேவை!
/
அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் யு.டி.எஸ்., ஒதுக்கீட்டில் கவனம் தேவை!
அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் யு.டி.எஸ்., ஒதுக்கீட்டில் கவனம் தேவை!
அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் யு.டி.எஸ்., ஒதுக்கீட்டில் கவனம் தேவை!
ADDED : பிப் 21, 2026 08:16 AM

தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது வெகுவாக அதிகரித்துள்ளது. நிலம் கிடைப்பதில் காணப்படும் தட்டுப்பாடு காரணமாக நகர்ப்புற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் தான் மக்களின் தேவையை முறையாக பூர்த்தி செய்யும் வழியாக அமைந்துள்ளது.
ஒரு காலத்தில், 2,400 சதுரடி நிலத்தில், அதிகபட்சமாக, 6 வீடுகள் கட்டப்பட்ட போது, ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும், 400 சதுர அடி என்ற அளவில் நிலத்தில் பங்கு கிடைத்தது. ஆனால், தற்போது, 2,400 சதுர அடி நிலத்தில், 10 வீடுகள் கட்டப்படும் நிலையில், உரிமையாளர்களுக்கு கிடைக்கும் நிலத்தில் பங்கு வெகுவாக குறைந்துள்ளது.
அதே நேரத்தில் அதிக வீடுகள் கொண்ட அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் போது நிலத்தை யு.டி.எஸ்., எனப்படும் பிரிபடாத பங்காக பிரிக்கும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் வாங்கும் வீட்டின் விலை தொடர்பான விஷயங்களை துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும்.
உதாரணமாக, 900 சதுர அடி பரப்பளவுள்ள வீட்டை வாங்குவதாக வைத்துக்கொண்டால், அதில் யு.டி.எஸ்., எவ்வளவு கொடுக்கப்படுகிறது என்று பாருங்கள். வீட்டின் மொத்த பரப்பளவில், 40 முதல், 50 சதவீதம் என்ற அளவில், யு.டி.எஸ்., ஒதுக்கும் அளவு இருந்தால் அது நல்லது என்று கூறப்பட்டது.
ஆனால், அதிக வீடுகள் கட்டப்படும் நிலையில், 15 சதவீத அளவுக்கு யு.டி.எஸ்., கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது. இதில் கட்டுமான நிறுவனங்கள் நிலையில் பார்த்தால், மொத்த நிலத்தை வீடுகள் எண்ணிக்கை அடிப்படையில் பிரிக்கும் போது , ஒரு வீட்டுக்கு, 0.5 என்ற விகிதாசாரம் நடைமுறையில் இருந்தது இது தற்போது, 0.25 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
இதனால், வீடு வாங்குவோருக்கு கிடைக்கும் யு.டி.எஸ்., அளவு முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெகுவாக குறைந்துள்ளது. மிக குறைந்த அளவுக்கு யு.டி.எஸ்., ஒதுக்கீட்டில் வீடு வாங்கும் போது, அதை மறு விற்பனை செய்யும் நிலையில் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
குறிப்பாக, 900 சதுரடி வீட்டை, 90 லட்ச ரூபாய்க்கு வாங்கும் நபர் அதில் யு.டி.எஸ்., அளவு என்ன என்று பார்க்க வேண்டும். அதில், குறைந்தபட்சம், 200 சதுர அடி யு.டி.எஸ்., கிடைத்தால் அங்கு ஒரு சதுரடியின் சந்தை மதிப்பு, என்ன என்று பார்க்க வேண்டும்.
ஒரு சதுரடி நிலத்தின் மதிப்பு, 10,000 ரூாபாய் என்றால், நீங்கள் வாங்கும் வீட்டில் நிலத்தின் பங்கு வகையில், 20 லட்ச ரூபாய் நிலையான சொத்தாக கருதப்படும். வீட்டின் விலையில் இது போக மீதியுள்ள தொகைக்கு கட்டுமான நிறுவனம் சொல்லும் கணக்கு என்ன என்று பாருங்கள்.
எதிர்காலத்தில் அந்த பகுதியில் நிலத்தின் மதிப்பு மூன்று மடங்காக உயர்ந்தாலும், நீங்கள் தற்போது வாங்கிய விலைக்கு வீட்டை விற்பனை செய்ய வாய்ப்பு இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். போதிய யு.டி.எஸ்., இல்லாமல், பெரிய திட்டங்களில் வீடு வாங்குவோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுநர்கள்.

