PUBLISHED ON : ஆக 04, 2024

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
என் கணவர் 'டாஸ்மாக்' மதுவுக்கு அடிமையாகி 2008ம் ஆண்டுல இறந்துட்டார். ஓட்டல் ஊழியரா வேலைக்கு சேர்ந்து என் நாலு பிள்ளைகளையும் சிரமப்பட்டு வளர்த்தேன். ஆனா, முதுகலை பட்டதாரியான என் கடைசி பொண்ணு, நவம்பர் 1, 2023 நிகழ்ந்த விபத்துல இறந்துட்டா!
வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில, பெரியார் நகர் மிலிட்டரி சாலை சந்திப்பை சைக்கிள்ல அவ கடந்தப்போ, லாரி மோதி சம்பவ இடத்துலேயே மரணம். பி3 காஞ்சி தாலுகா வட்ட காவல் நிலையத்துல வழக்கு பதிவாச்சு. கூடவே, முதல்வர் சாலை விபத்து நிவாரணம் தர்றதுக்காக இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்களை வாங்கினாங்க! ஆனா, இப்போ வரைக்கும் எந்த நிவாரணமும் கிடைக்கலை!
'வருவாய் துறைக்கு பரிந்துரை பண்ணிட்டோம்'னு காவல் நிலையம் அலைக்கழிக்குது. இளைப்பு நோய் காரணமா இரண்டு ஆண்டுகளா நான் வேலைக்குப் போகலை. இளைய மகனோட கட்டட வேலை கூலியிலதான் எல்லாரும் உயிர் வாழ்றோம். கணவரால கைவிடப்பட்ட என் மூத்த மகளும் என் பாதுகாப்புலதான் இருக்குறா!
அய்யா... தாமதிக்கப்படுற நீதி மறுக்கப்படுற நீதிக்கு சமமில்லையா; ஏன் இப்படி பண்றீங்க?
- சாலை விபத்தில் 22 வயது மகள் வெற்றிச்செல்வியை இழந்து, முதல்வர் நிவாரணத்திற்கு தவிக்கும் ஜெயலட்சுமி, காஞ்சிபுரம்.
