PUBLISHED ON : ஜூலை 02, 2024 12:00 AM

கள்ளச் சாராயம் ஒரு குடும்பத்தை எவ்வளவு சீரழிக்கும் என்பதற்கான உதாரணம்தான் பிச்சையம்மாள்..
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய சம்பவம் நடைபெற்ற கருணாபுரம் பகுதியை சுற்றி வந்த போது தெருவில் ஒரு பெண் நாவல்பழம் விற்றுக்கொண்டு சென்றார்.
எங்களைப் பார்த்ததும்,' தம்பிகளா நீங்களாவது கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கிங்களேன்? காலையில இருந்து வியாபாரமே இல்லை! சாயந்திரத்திற்குள்ளே அந்த குடிகாரனுக்கு! கொடுக்கவாவது பணம் வேணும்'..என்றார்.
'நீங்க கொடுக்கிற காசுலதான் கஞ்சி காய்ச்சணும்னு கூட சொல்லு தாயி ஏத்துக்கிறோம், ஆனா குடிகாரனுக்கு கொடுக்கணும்றீயே அதுதான் புரியல' என்றதும்..
முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை தனது அழுக்கு முந்தானையால் துடைத்துக் கொண்டு,தனது கதையை சொல்ல ஆரம்பித்தார்.
கல்யாணம் கட்டிக்கிட்ட நாள் முதலா குடிதான் அவனுக்கு முதல் பொண்டாட்டி, அவன்னா அது என் புருஷன்தான்.
ஆனா புருஷனுக்குண்டான எந்த தகுதியும் இல்ல, ஒரு தம்பிடித்துட்டு சம்பாதிக்க வழியில்ல, ஆனா வாயும் கையும் மட்டும் ஏகத்துக்கு நீளும்.
நான் விடிகால சந்தைக்கு போய் அன்னைக்கு என்ன பழம் குறைஞ்ச விலைக்கு கிடைக்குதோ? அதை வாங்கி தெருத்தெருவாய் பொழுது சாயற வரைக்கு அலைந்து திரிந்து விற்றால்தான் ஒரு நாளைக்கு இருநுாறு ரூபாயாவது கிடைக்கும்.
இதுல முதல்ல ஒரு நுாறு ரூபாயை அவனுக்கு எடுத்து வச்சுரணும், நான் வர்ர வாசலைப் பார்த்துக்கிட்டே கழுகு மாதிரி காத்திட்டு இருப்பான், வந்ததும் பிடுங்காத குறையா நுாறு ரூபாயை துாக்கிட்டு சாராயம் குடிக்க போயிடுவான்.
அதுவரைக்கும் கூட பராவாயில்லை, அதுக்கப்புறம் சாராயம் குடிச்சுட்டு வந்து என்னை பேசக்கூடாத வார்த்தையில பேசி அடிப்பான் பாரு.. அததான் தாங்கமுடியாது.
அவனோட இயலாமை, அதை எங்கிட்ட காட்டுறான்.. சொந்தம்னு கட்டி வச்சாங்க ஒரு சொகம் கிடையாது, விட்டுட்டு போகவும் முடியல பிறந்த வீட்டுக்கும் போக வழியில்ல, எதிர்க்கவும் திராணியில்ல நித்தம் நித்தம் செத்து பிழைக்கிறேன்.
எங்க இருந்துதான் இவனுகளுக்கு சாராயம் கிடைக்குதோ தெரியல, இவ்வளவு கெடுபிடியிலும் கூட குடிச்சுட்டு வந்துருவான்.
எனக்கு கட்டிக்க ஒரு நல்ல சேலை இல்ல,செருப்பு தேய்ந்து ஒட்டையே விழுந்துருச்சு, ஓரு செருப்பு மாத்தணும் அதுக்கு காசு சேரமாட்டேங்குது அவனுக்கு போக மிச்ச காசுல எதையே வேகவச்சு எப்படியோ சாப்பிட்டு நாளைக் கடத்திட்டுருக்கேன்.
நாள் கிழமை விடுமுறை எல்லாம் கிடையாது, என்னைக்காவது முடியாம படுத்திருந்தா அன்னைக்கு குடிக்க காசு கிடைக்காதுன்னு தெரிஞ்சுகிட்டு இன்னும் அதிகமா அடிப்பான் அதுக்கு பயந்துட்டு இருமிகிட்டவாது ஒரு நுாறு ரூபாய் காச சம்பாதிக்க தெருவுக்கு வந்துருவேன்.
இந்த கள்ளச் சாராயத்தை அடியோடு ஒழிப்பாங்காளா?, என் புருஷன் மாதிரி ஆட்கள் திருந்துவானுங்களா? ..சம்பாதிக்காட்டியும் பராவாயில்லை அடிக்கமா இருந்த போதும் தம்பி..இதெல்லாம் நடக்குமா? என்று மீண்டும் பொங்கிவரும் அழுகையை அடக்கமுடியாமல் கேட்கிறார்.
கள்ளச் சாராயம் இப்படி இன்னும் எத்தனை பிச்சையம்மாக்களை உருவாக்கி வைத்துள்ளதோ?
கனத்த இயத்தோடு கனிசமாக உதவமுடிந்ததே தவிர, அவரது கேள்விகளுக்கு பதில் தர இயலவில்லை...
-எல்.முருகராஜ்