PUBLISHED ON : செப் 03, 2026 06:24 PM

தாய்மையின் வலிமைக்கு முன் வறுமையும் சரி, தடைகளும் சரி, வெறும் தூசு!' என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரமாபாயின் (47) வாழ்க்கை.
தன் மகள்களின் கல்விக்கனவுக்காகச் சேலை கட்டிக்கொண்டு, வெறும் காலில் மாரத்தான் ஓடி முதலிடம் பிடித்த அந்த வைராக்கியத் தாயின் போராட்டம் இப்போது ஒரு புதிய திருப்புமுனையை எட்டியுள்ளது. அவரது தியாகத்திற்கு அங்கீகாரமாக மாநில அரசு தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளது
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டம் அம்பாஜோகாயைச் சேர்ந்தவர் ரமாபாய். கடந்த 2012-ல் சாலை விபத்தில் கணவனை இழந்த பிறகு, நிலமோ சொத்தோ இன்றி இரண்டு மகள்களுடன் தனியாகப் போராடி வருகிறார். உள்ளூர் அகாடமியில் சமையல்காரராகப் பணிபுரிந்து, மாதத்திற்கு ரூபாய் 9,000 சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றும் இவரது வாழ்க்கை ஒரு போராட்டக்களமாகும்.
இளைய மகள் ஆர்த்திக்கு தேர்வுப் புத்தகங்கள் வாங்க ரூபாய் 3,200 தேவைப்பட்டது. அன்றாடச் செலவுக்கே திணறும் ரமாபாயால் அந்தத் தொகையை உடனே கொடுக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட மனவேதனையின் இருந்தார் அந்த நேரத்தில்தான் உள்ளூர் மாரத்தான் போட்டி பற்றிய அறிவிப்பு வந்தது பெண்களுக்கான அந்த போட்டியில் வெற்றி பெற்றால் 3 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைக்கும் என்பதால் ரமாபாய் அதில் கலந்து கொள்ள முடிவு செய்தார்.
என்ன வேடிக்கை என்றால் ரமாபாய் இதற்கு முன் ஓடியதே இல்லை அவ்வளவு ஏன் வேகமாக நடந்தது கூட கிடையாது.
விளையாட்டு உடைகளோ, ஷூக்களோ இல்லாமல் வழக்கமான சேலையுடன் ஓடிய அவருக்கு அவர் அணிந்திருந்த அறுதப்பழசான செருப்பு ஓடுவதற்கு இடையூறாக இருந்தது இருந்தும் அதை துாக்கி எறியவும் மனசு இல்லை உடனே அதைக் கழற்றி கையில் பிடித்துக்கொண்டு, வெறும் காலில் கற்களையும் பொருட்படுத்தாமல் ஓடி முதலிடம் பிடித்தார். அந்தப் பரிசுத் தொகை மகளின் புத்தகக் கனவை நனவாக்க உதவியது. ஆனால், இவர்களின் துயரத்திற்குப் பின்னணியில் கணவரின் இறப்புச் சான்றிதழ் இல்லாததால் அரசு உதவித்தொகை கிடைக்காமல் முடங்கிப்போயிருந்த கசப்பான உண்மையும் இருந்தது.
ரமாபாயின் இந்தத் தியாகக் கதை சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன: ரமாபாயின் போராட்டத்தைக் கவனத்தில் கொண்ட மகாராஷ்டிர மாநில அரசு, இவர்களது குடும்பத்திற்கும் மகள்களின் உயர்கல்விக்கும் முழுமையான நிதியுதவி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சகம் நேரடியாகத் தலையிட்டுள்ளதுடன், பல்வேறு சமூக அமைப்புகளும் ரமாபாயின் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ளன.
தனது மகள்களுக்காகத் தன் உடல் வலியையும், வறுமையையும் பொருட்படுத்தாமல் ஓடிய அந்தத் தாயின் வியர்வைக்கு இன்று மதிப்பு கிடைத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த உதவி அறிவிப்பு, ரமாபாயைப் போன்ற ஆயிரக்கணக்கான ஏழைத் தாய்மார்களின் கல்விக்கனவுகளுக்கு ஒரு புதிய ஒளியைச் சேர்த்துள்ளது. ரமாபாயின் ஓட்டம் வெறும் பரிசை வெல்ல மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த விடியலுக்கான வரலாற்றுத் தொடக்கம்!
-எல்.முருகராஜ்
