PUBLISHED ON : டிச 30, 2019
2019-ஆம் ஆண்டில், இளைய தலைமுறையினர் பருவநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடினர். உலகத் தலைவர்களை அதுசார்ந்த முக்கிய நடவடிக்கைகளையும் எடுக்கச் செய்தனர்.
இந்நிலையில், ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் என்கிற பள்ளி மாணவி, பருவநிலை மாற்றம் பற்றிய பல முக்கிய கேள்விகளை துணிச்சலுடன் எழுப்பினார். இவரது கேள்விகளுக்குப் பிறகு, பல இளைஞர்கள் சுத்தமான காற்றுக்காகவும், தண்ணீருக்காகவும் குரல் எழுப்பத் தொடங்கினர்.
வளர்ந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் பருவநிலை மாற்றம் பற்றிப் பேசும் கருத்துகள், வளரும் நாடுகளுக்குப் பொருந்தாது என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், சூழல் பற்றி கிரெட்டா எழுப்பிய கேள்விகள் உலகம் முழுவதும் இளைய தலைமுறையினரை விழிப்படைய வைத்துள்ளது.
இவரைப் போலவே, இந்தியாவைச் சேர்ந்த ரித்திமா பாண்டேவும், செயற்பட்டு வருகிறார். மொத்தத்தில் இளைய தலைமுறையினர் எழுப்பும் சூழல் சார்ந்த கேள்விகளுக்கு, பொதுமக்கள் மத்தியில் ஆதரவும் கிடைத்து வருகிறது.
இவர்களது குரல்களுக்கு நியாயம் கற்பிப்பதுபோல, 2019ஆ-ம் ஆண்டில் உலக அளவில், பனிப்புகை, புயல், வெள்ளம், ஒழுங்கற்ற மழைப்பொழிவு போன்ற பல பிரச்னைகள் ஏற்பட்டன. வெறும் பேச்சாக மட்டுமன்றி, அதற்கான தீர்வுகளையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரியவந்தது.
மொத்தத்தில் பருவநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு, செயற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை, இந்த ஆண்டில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
- சாரதா பாலசுப்ரமணியன்

