தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நடந்த தமிழறிஞர்

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நடந்த தமிழறிஞர்

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நடந்த தமிழறிஞர்


PUBLISHED ON : டிச 18, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் வசித்தார் அவர். அவருக்கு இடையன்குடியில் வேலை கிடைத்தது. இடையன்குடி என்பது, திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் ஓர் ஊர். அதாவது, தமிழகத்தின் கீழ்ப்பகுதி.

சென்னையோ தமிழகத்தின் மேற்பகுதியில் இருக்கிறது. இன்றைய வரைபடத்தின்படி, சென்னையிலிருந்து இடையன்குடி சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அதனால் என்ன? பேருந்தோ, புகைவண்டியோ, மகிழுந்தோ ஏறினால் ஒரே இரவில் சென்றுவிடலாமல்லவா?

உண்மைதான். ஆனால், சென்னையிலிருந்து இடையன்குடிக்கு மாற்றலான நம் நண்பர் 1841ல் வாழ்கிறார். அதாவது, இன்றிலிருந்து சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னால்!

அப்போதெல்லாம் சென்னைக்கும் இடையன்குடிக்கும் நேரடிப் போக்குவரத்து வசதியெல்லாம் கிடையாது. ஊர்ஊராக மாறித்தான் செல்லவேண்டும்.

அந்த நண்பர் அலுத்துக் கொள்ள வில்லை, 'தமிழகத்தை நன்றாகப் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு' என்று மகிழ்ந்தார். 'நான் நடந்தே இடையன்குடிக்குச் செல்கிறேன்' என்று புறப்பட்டுவிட்டார்.

இதற்குக் காரணம், அவர் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை, அங்கே வாழும் மக்களை நன்கு கவனித்துப் புரிந்துகொள்ள விரும்பினார். வண்டியில் செல்வதைவிட, நடந்துசென்றால் ஊர்களை நன்கு அறிந்துகொள்ளலாம் என்று தீர்மானித்தார்.

இதன்படி, அவர் சென்னையிலிருந்து புறப்பட்டு, ஒவ்வோர் ஊராகப் பார்த்தபடி நடந்தார். வழியில் இருக்கும் இயற்கைக்காட்சிகள், நதிகள், கோவில்கள் போன்றவற்றையெல்லாம் கவனித்தபடி சென்றார். சிதம்பரம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, கும்பகோணம், தஞ்சை, திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், நீலகிரி, கோவை, மதுரை, திருமங்கலம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை வழியாக இடையன்குடிக்கு வந்தார்.

இந்த ஊர்களெல்லாம் எங்கே இருக்கின்றன என்று தமிழக வரைபடத்தைக் கவனித்துப்பாருங்கள். இத்தனை நீண்ட ஒரு பயணம் இன்றைக்கே பெரும் களைப்பைத் தரக்கூடியது. அப்படியானால், போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாத அன்றைய சூழ்நிலையில், அவர் எத்தனை சிரமங்களை அனுபவித்திருப்பார்!

ஆனால், அதையெல்லாம் அவர் சிரமமாகவே நினைக்கவில்லை. தமிழ்நாட்டை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே கருதினார்.

இப்போது, உங்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயம்: இந்த அளவு சிரமப்பட்டுத் தமிழ்நாட்டைக் கவனித்துப் புரிந்துகொண்ட அவர், தமிழர் அல்லர், இந்தியரே அல்லர், ராபர்ட் கால்டுவெல் என்ற அவர், அயர்லாந்தில் பிறந்தவர், அங்கிருந்து இந்தியா வந்து தொண்டாற்றியவர்.

பிறந்த இடம் வேறானாலும், தமிழகம் வந்தபிறகு, கால்டுவெல் இந்த ஊரின் மொழியைக் கற்றுக்கொண்டார், மக்களைப் புரிந்துகொண்டார், அவர்களோடு நெருங்கிப் பணியாற்றினார்.

பல ஆய்வுகளில் ஈடுபட்டுச் சிறந்த படைப்புகளை வெளியிட்டார். அவர் வழங்கிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்', 'திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு' ஆகிய நூல்கள் இன்றைக்கும் பரவலாக வாசிக்கப்படுகின்றன.

உங்கள் ஊருக்கு வெளியே நீங்கள் எவ்வளவு தொலைவு சென்றிருக்கிறீர்கள்? புதிய ஊர்களைக் காணச்செல்லும்போது, வழக்கமான சுற்றுலா தலங்களை மட்டும் பார்க்காமல், அங்குள்ள மனிதர்களை, அவர்களுடைய மொழி, பழக்கவழக்கங்களைக் கவனித்துப் பாருங்களேன், உங்களுக்குள் ஒரு புதிய உலகம் திறக்கும்!

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us