PUBLISHED ON : செப் 05, 2016

சோப்பை நீரில் குழைத்ததும் வாசனையோடு, வழவழவென நுரைக்குமிழ் பெருகும். பச்சை, சிகப்பு, மஞ்சள் என சோப்புக் கட்டிகள் பல நிறங்களில் கிடைக்கின்றன.
சோப்பு எந்த நிறத்தில் இருந்தாலும் அவற்றின் நுரை மட்டும் வெண்மையாகவே இருப்பது ஏன் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?! சோப்பு நுரை என்பது நுண்ணிய சோப்புக் குமிழ்களின் கூட்டமே. சோப்புக் குமிழ் சிறு அளவு காற்றை உள்ளடக்கி அமைந்திருக்கும் சோப்புக் கரைசலின் மெல்லிய படலம். சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையின் (Surface Tension) காரணமாக, அதன் படலம் நீண்டு பரவ முடிகிறது. ஒரு குறிப்பிட்ட கன அளவுள்ள நுரையினால் கவரப்படும் பரப்பு, அதே கன அளவுள்ள நீரினால் கவரப்படும் பரப்பைவிட மிகுதி. சோப்பு நுரை இவ்வாறு பரவுவதன் காரணமாக, அதில் ஏதேனும் சிறு அளவு வண்ணம் இருப்பினும் அது மங்கிப்போகிறது. சோப்புப் படலம் ஒளி புகக்கூடியது. சோப்புக்குமிழ்களின் கூட்டமான நுரையை அடையும் ஒளி, பல்வேறு திசைகளில் சிதறிப் பரவுவதால் நுரை வெண்மையாக மட்டுமே காட்சியளிக்கிறது. பல்வேறு நிறம் கொண்ட சோப்புகளின் நுரைகளும் வெண்மையான நிறத்திலேயே காட்சியளிக்க இதுவே காரணம்!
