PUBLISHED ON : அக் 20, 2016

“இனி யாரும் வரமாட்டார்கள். எல்லோரையும் எப்படி அழைக்க முடியும்? இங்கே அதற்கேற்ற இடவசதி இல்லையே… அவர்கள் எல்லாம் பெரிய விலங்குகள் அல்லவா… இதற்குள் நுழையவே சிரமப்படுவார்கள்” என்றது கிக்கியம்மா..
“அது சரிதான் டீச்சரம்மா.” அணில் அண்ணாச்சி ஏற்றுக் கொண்டது.
“முடிந்தால் வர வேண்டும் என்று சேவல் செந்தாடியை மட்டும் அழைத்திருந்தேன். இவ்வளவு நேரமாகியும் ஆளைக் காணவில்லையே... ஏன் வரவில்லை என்று தெரியவில்லை.”
“யார்? சேவல் செந்தாடியா? அவன் இங்கே வருவானா?” அணில் அண்ணாச்சி கேட்டது.
“ஆமாம். ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? அவர் இங்கே வரக் கூடாதா?” கிக்கியம்மாவுக்கு அணில் அண்ணாச்சியின் கேள்வி பிடிக்கவில்லை.
அணில் அண்ணாச்சி கோபத்துடன் சொன்னது: “இப்போதே சொல்லிவிட்டேன். அவன் வந்தால் நான் போய்விடுவேன். அவன் என்னை ஏமாற்றிய திருட்டுப் பயல். எருமை அமைதிமணியிடம் நான் நெல் கேட்டிருந்தேன். தருகிறேன் என்று அமைதிமணி ஒப்புக்கொண்டிருந்தான். நான் சாக்குடன் சென்றபோது, என்ன நடந்தது தெரியுமா? சேவல் செந்தாடி அதிக விலை கொடுத்து நெல்லையெல்லாம் வாங்கிச் சென்றுவிட்டதாக அமைதிமணி சொன்னான். அப்புறம் நான் காளை ஆற்றல்மணியிடம் நெல் வாங்கினேன். அதிக விலை கொடுக்க வேண்டியிருந்தது. நெல்லும் சரியில்லை. இத்தனைக்கும் அந்த செந்தாடிப் பயல் ஒருவன்தான் காரணம். அவனுக்கு நெல்லே தேவையில்லை. என்னை ஏமாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்தால்தான் அப்படிச் செய்தான், போக்கிரி!”
“சேவல் செந்தாடி ஒரு மளிகைக் கடை தொடங்கப் போவதாகக் கேள்விப்பட்டேன்” என்று கண்ணடித்துச் சொன்ன முயல் மொசமொசப்பன், கண்ணம்மாவைப் பார்த்தது.
“அதை நானும் கேள்விப்பட்டேன்.” வாசலிலிருந்து யாரோ கனத்த குரலில் சொல்வதைக் கேட்டு எல்லாம் திரும்பிப் பார்த்தன. ஒன்றிரண்டு பாத்திரங்களைக் கையில் பிடித்தபடி, யானை கருமலை சிரித்துக்கொண்டு நின்றிருந்தது.
“யார், கருமலையா? வா, வா. உட்கார்!” அணில் அண்ணாச்சி அழைத்தது. கிக்கியம்மா எதுவும் பேசவில்லை. பிறந்த நாளான இன்று, காலையிலேயே கருமலை திட்டியதை அது எப்படி பொறுத்துக் கொள்ளும்?
“நான் உள்ளே வரவில்லை. வந்தால் டீச்சரம்மாவின் வீடு உடைந்து தூள்தூளாகிவிடும்.' கருமலை சிரித்தபடியே சொன்னது: “பாலையும் பழத்தையும் கடவுளுக்குப் படைத்து அந்தப் பிரசாதத்தைக் கொடுப்பதற்குத்தான் வந்தேன். இன்று டீச்சரம்மாவின் பிறந்த நாள் என்று
காலையில் எனக்குத் தெரியாது. அப்புறம் பசு அன்புராணி கோயிலுக்கு வந்தபோதுதான்
தெரிந்து கொண்டேன்.”
கருமலை மன்னிப்புக் கேட்பது போல் பேசியதை, கிக்கியம்மா புரிந்துகொண்டது. அது சிரித்தபடியே இறங்கிச் சென்று பாத்திரங்களை வாங்கியது. “ஒரு டம்ளர் பாயசம் குடித்துவிட்டுப் போகலாம் கருமலை” என்று அன்புடன் அழைத்தது.
“வேண்டாம் டீச்சரம்மா.” கருமலை தலையசைத்தது: “வேலை இருக்கிறது. போய் வருகிறேன்.” அது அசைந்தாடி நடந்து சென்றது.
“பிரசாதம் கிடைத்துவிட்டது. இனி எல்லோரும் சாப்பிட உட்காருவோம். இலை போடு கண்ணம்மா,. நான் பரிமாறுகிறேன்” என்று கிக்கியம்மா சொன்னது.
“நான் வருவதற்குத் தாமதமாகிவிட்டதா, டீச்சரம்மா?” என்று கேட்டவாறே சேவல் செந்தாடி விரைவாகப் படியேறி வந்தது. அணில் அண்ணாச்சியின் முகம் கருத்தது. அது துள்ளி எழுந்தது. “டீச்சரம்மா, நான் இனிமேல் இங்கே இருக்க மாட்டேன். நீங்கள் இந்த செந்தாடிப் பயலையும் அழைத்திருக்கிறீர்கள் என்று முன்பே தெரிந்திருந்தால், நான் இங்கே வந்திருக்கவே மாட்டேன். என்ன அவமானம்! என்ன அவமானம்!” என்று சொல்லிக் கொண்டே படியிறங்கி ஓடியது.
கிக்கியம்மா, அணில் அண்ணாச்சியின் பின்னால் பாய்ந்தோடி அதன் கையைப் பிடித்து நிறுத்தியது. கையைத் தட்டிவிட்டு ஓடியது அணில் அண்ணாச்சி. அப்போது வண்டிக்காரன் நல்லிதயன் குதிரை, காலி வண்டியுடன் வந்துகொண்டிருந்தது. அணில் அண்ணாச்சி வண்டியில் தாவி ஏறி அமர்ந்தது. வண்டி விரைந்து சென்று மறைந்தது.
பச்சைக்கிளி கிக்கியம்மா கடும் மன வேதனையுடன் அங்கேயே நின்றிருந்தது. 'அடக் கடவுளே! என் பிறந்த நாள் அன்றுதான் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமா? இந்த அணில் அண்ணாச்சி எவ்வளவு காலமாக நண்பராகப் பழகி வருகிறார்! எல்லாம் ஒரே நாளில் முடிந்துவிட்டதே!' அதற்குத் தலை சுற்றியது. கண்கள் இருண்டன. அது அப்படியே மயங்கி விழுந்தது.
“என்ன ஆயிற்று டீச்சரம்மா?” காகம் கண்ணம்மா பதறி ஓடிச் சென்று, கிக்கியம்மாவைத் தாங்கிப் பிடித்தது. கிக்கியம்மா முற்றிலும் நினைவிழந்திருந்தது.
மருத்துவர் பெரியமியான் சாய்வு நாற்காலியில் படுத்து சுகமாக வெயில் காய்ந்து கொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டிருந்தது என்றாலும், அது தூங்கவில்லை. 'இந்த தண்ணியில்லாக் காட்டுக்கு வந்து தொழில் செய்ய நினைத்தேனே, நான் ஒரு முட்டாள்தான் போலிருக்கிறது' என்று தன்னைத்தானே நொந்துகொண்டு படுத்திருந்தது. இங்கே நோயாளிகள் மிகவும் குறைவு. இருக்கும் நோயாளிகளுக்கோ, பெரியமியான் மீது நம்பிக்கை இல்லை. அதனால் வருமானம் இல்லை. எப்படித்தான் செலவுகளைச் சமாளிப்பது?
ஏதோ சத்தம் கேட்டு பெரியமியான் கண் திறந்து பார்த்தது. 'யாரோ மூன்று, நான்கு பேர் வருகிறார்கள். அட, அவர்கள் ஒரு நோயாளியை தாங்கிப் பிடித்து அழைத்து வருகிறார்களே… எனக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பித்துவிட்டதோ என்னமோ!' அது மகிழ்ச்சியுடன் எழுந்து வாசலுக்குச் சென்றது.
காகம் கண்ணம்மாவும், சேவல் செந்தாடியும் சேர்ந்து, கிக்கியம்மாவை கைத்தாங்கலாக அழைத்து வந்தன. கிக்கியம்மாவுக்குக் குடைபிடித்து வந்தது முயல் மொசமொசப்பன்.
“டீச்சரம்மாவுக்கு மயக்கம்.” மொசமொசப்பன், பெரியமியானிடம் சொன்னது. “ம்” என்று மட்டுமே முனகியது பெரியமியான். மருத்துவர் என்றால் கௌரவமாக நடந்துகொள்ள வேண்டும் அல்லவா?
கிக்கியம்மாவை மேசை மீது படுக்கவைத்து, மருத்துவர் பெரியமியான் பரிசோதித்தது. கிக்கியம்மாவின் புஷ்டியான மினுமினுக்கும் அழகிய உடலைப் பார்த்தபோது, அதன் வாயில் நீர் சுரந்தது. 'ஆனால் என்ன செய்வது? இந்த வீணாய்ப்போன கிராமத்தில், யாரும் யாரையும் கொன்று தின்னக் கூடாது என்றல்லவா சட்டம் போட்டிருக்கிறார்கள்… என்ன ஒரு தொல்லைபிடித்த சட்டம். ரகசியமாக சட்டத்தைக் கொஞ்சம் மீறித்தான் ஆக வேண்டும் போலிருக்கிறது.'
“பரவாயில்லை. நான் ஒரு மருந்து கொடுக்கிறேன். ஆனால், நோயாளி இப்போது உடலை அசைக்கவே கூடாது. இரண்டு நாட்கள் இங்கேயே படுத்திருக்கட்டும். இங்கே இருந்தால் எப்போதும் என் கவனிப்பும் கிடைக்கும் அல்லவா...” பெரியமியான் கண்ணாடியைக் கழற்றி சட்டை விளிம்பில் துடைத்தபடி, அந்தப் பிராணிகளைப் பார்த்தது. அதன் கண்கள் நெருப்புத் துண்டுகள்போல பளபளத்தன.
(தொடரும்)
மலையாளம்: சுமங்களா தமிழில்: யூமா வாசுகி

