PUBLISHED ON : ஜன 15, 2018

சமீப காலமாக மாணவர்கள் அதிக மனஅழுத்தத்திற்கும், உணர்ச்சிவயப்பட்டும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவு அதிகரித்து வருகிறது. அற்ப காரணங்களுக்காக மனஅழுத்தமடைவதும், குழப்பங்களுக்கு ஆளாவதுமான இந்த நிலை ஏன் பெருகி வருகிறது? மாணவர்களின் மன அழுத்தம், தற்கொலை முடிவுகளுக்கு எவையெல்லாம் காரணங்களாக அமைகின்றன? போன்ற விஷயங்களைப் பற்றி 'ஸ்கார்ஃப்' நிறுவனத்தின் உளவியல் மருத்துவர் ஆர்.மங்களாம்பிகாவுடன் சென்னை, மைலாப்பூர், ராமகிருஷ்ணா உறைவிட உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளையும், உளவியல் மருத்துவரது ஆலோசனைகளையும் தெரிந்துகொள்வோம்.
டாக்டர் ஆர்.மங்களா
பள்ளியில் படிக்கற மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மன அழுத்தங்களுக்கு ஆளாவதாகச் சொல்றாங்க. மாணவர்களோட மன அழுத்தங்களுக்கு வீட்டுச்சூழல், சமூகச்சூழல், கல்வி, நட்பு என பல விஷயங்கள் காரணமா இருக்கு. சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவயப்பட்டு தற்கொலை முடிவுக்கெல்லாம் போயிடறாங்க. மன அழுத்தம் ஏன் வருது, அதுலயிருந்து எப்படி விடுபடலாம். இந்த விஷயங்களை நாம இன்னைக்குப் பேசுவோம். முதல்ல, உங்களுக்கு என்ன காரணங்களினால் மனஅழுத்தம் ஏற்படுகிறது என்பதைப்பற்றிச் சொல்லுங்க.
தா.இராஜா, 10ஆம் வகுப்பு
எனக்கு குறிப்பா வீட்டுச்சூழல்தான் அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துது. படிப்பு விஷயத்துல நான் நல்லா படிக்கறேன். அதனால எனக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. ஆனா பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில இருக்கோம். நினைச்சதை வாங்க முடியாது. கடன் சுமை இருக்கு. இதெல்லாம் எப்ப சரியாகும்னு அடிக்கடி யோசிச்சிட்டே இருப்பேன். அது எனக்கு டென்ஷனா இருக்கும்.
நா.ரா.கண்ணன், 10ஆம் வகுப்பு
நெருங்கிய நண்பர்கள் பேசாம இருந்துட்டா நான் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாவேன். ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கறதால, அப்பா, அம்மா, சகோதரர்களை எப்பவாச்சும்தான் பார்ப்பேன். கூடவே இருக்கற நண்பர்கள் பேசலைன்னா எனக்கு ரொம்ப வருத்தமா ஆயிடும். அதனால கூடுமான வரை நண்பர்களோட சண்டை போடாம இருப்பேன்.
கு,இராகேஷ், 10ஆம் வகுப்பு
பாடத்தேர்வுல சரியா மதிப்பெண் எடுக்கலன்னா எனக்கு ரொம்ப வருத்தமாயிடும். அதை நினைச்சே கவலைப்பட்டுட்டு இருப்பேன். கடுமையா உழைச்சி படிச்சாலும் சில நேரத்துல அதை தேர்வுல எழுத முடியாம மறந்துபோயிடுது. மறதிதான் எனக்கு டென்ஷன் தர்ற விஷயம்.
டாக்டர் ஆர்.மங்களா
சரி, ஒவ்வொருத்தருக்கும் இப்படி பல வகையான காரணங்களால மனஅழுத்தம் ஏற்படுது. மனஅழுத்தம் என்பது தொடர்ச்சியா ஏற்பட்டா அது கண்ணுக்குத் தெரியாத ஒரு நோயா மாறிடுது. எல்லா விஷயங்களையும் பிறரோட பகிர்ந்துக்கணும். தனக்குள்ளேயே பூட்டி வெச்சிட்டு இருந்தா, அது அழுத்தமா உருவெடுக்கும். அப்பா, அம்மா, நண்பர்கள், ஆசிரியர்கள் இவங்க கிட்டேயெல்லாம் பேசி உங்களோட பிரச்னைகளைப் பத்தி ஆலோசிக்கணும். இதன்மூலமா மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.
ஏ.தருண்குமார், 9ஆம் வகுப்பு
நான் நிறைய விஷயங்களை யார்கிட்டேயும் பேசறதில்ல. நம்ம பிரச்னையைச் சொன்னா அவமானம்னு நினைச்சு விட்டுருவேன். அதனாலயே ரொம்ப டென்ஷனா இருப்பேன். பிரச்னைகளை மத்தவங்ககிட்ட பகிர்ந்துகிட்டா மனஅழுத்தம் குறையும்னு இப்ப தெரிஞ்சிகிட்டேன். இனிமே இதை கடைபிடிக்கறேன்.
கா.கார்த்திக் பாலன், 9ஆம் வகுப்பு
நான் கொஞ்சம் உயரம் குறைவா இருக்கேன்னு பல பேர் கிண்டல் பண்ணுவாங்க. தோற்றத்தை வெச்சு கேலி செய்யறது என்னை ரொம்ப மன அழுத்தத்துக்கு ஆளாக்குது. மனசுக்குள்ளேயே போட்டு குமைஞ்சுட்டு இருப்பேன். இனிமே அப்படி கிண்டல் பண்ணாங்கன்னா அவங்ககிட்ட பேசி புரிய வைப்பேன். அது மூலமா எனக்கு டென்ஷன் இல்லாம இருக்கும்.
வி.புவனேஷ்வரன், 9ஆம் வகுப்பு
எங்க ஊர்ல ஓர் அக்கா மார்க் கம்மியா எடுத்துட்டதால தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அது என் மனசை ரொம்ப பாதிச்சுது. மார்க் எடுக்கலன்னா அடுத்த முறை நல்லா படிச்சு மார்க் எடுக்க முயற்சி செஞ்சிருக்கலாமேன்னு தோணுச்சு. அதேசமயம், அந்த தற்கொலையால எனக்குள்ள ஓர் எண்ணம் ஆழமா பதிஞ்சுது. முயற்சியே பண்ணாம உயிரை மாய்ச்சிக்கிறது கோழைத்தனம்னு தோணுச்சு. நான் தன்னம்பிக்கையோட இருப்பேன். எந்தக் காரணத்துக்காகவும் மனஅழுத்தத்துக்கு ஆளாக மாட்டேன்.
டாக்டர் ஆர்.மங்களா
ரொம்ப நல்ல கருத்துகளைச் சொன்னீங்க. மனஅழுத்தம் என்பது நாம அதையே யோசிட்டு இருக்கறதால அதிகமாயிட்டே போகும். பிரச்னையை கிட்ட வெச்சுப் பார்த்துட்டே இருந்தா அது பெருசாதான் தெரியும். எந்தப் பிரச்னையானாலும் அதுக்கு எப்படித் தீர்வு காணறதுன்னு யோசிக்கணும். தேர்வு பயம், வீட்டுச்சூழல், நண்பர்கள் இப்படி எந்த விஷயமானாலும் அதை சரியான முறையில அணுகணும். ஓட ஓட மனஅழுத்தம் துரத்திகிட்டே இருக்கும். பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை. ஆனா அதை சரியான முறையில் தீர்க்க முயற்சி பண்ணணும். அதுதான் சரி. எந்த விஷயத்துக்கும் தற்கொலை தீர்வா ஆகாது. பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் இப்படி எல்லோரோடையும் பேசினா நமக்கான தீர்வுகள் கிடைக்கும். குறிப்பா, தன்னம்பிக்கையை அதிகரிச்சுக்கணும். உடலையும், மனதையும் ஆரோக்கியமா வெச்சுக்கணும். நம்பிக்கையே வாழ்க்கை!

