PUBLISHED ON : செப் 16, 2019

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. எறும்புகளின் பாதை பற்றி ஏதாவது ஆராய்ச்சி இருக்கிறதா?
சூ.இ.வருண் ஆதித்யா, 8ஆம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், மதுரை.
ஜெர்மனியைச் சார்ந்த ஹாலே-விட்டன்பர்க் மார்ட்டின் லூதர் பல்கலைக்கழகம் (Martin Luther University of Halle-Wittenberg) மற்றும் போட்ஸ்டம் பல்கலைக்கழகத்தை (University of Potsdam) சார்ந்த ஆய்வாளர்கள் எறும்புப் புற்றை ஆராய்ந்தனர். அதிலிருந்து சாரை சாரையாக வரும் எறும்புகளை வீடியோ மூலம் பதிவுசெய்து ஆய்வு செய்தனர். நெடுஞ்சாலைகளில் நகரத்துக்கு உள்ளே வர ஒரு தடமும், வெளியே போக வேறு தடமும் பிரிந்து இருக்கும். அதுபோல, எறும்புப் பாதைப் போக்குவரத்தில்,
இடப்பக்கம்: உணவு மற்றும் எங்கே உணவு கிடைக்கும் என்ற தகவலை ஏந்தி புற்றுக்கு வரும் எறும்புகள் செல்லும்;
வலப்பக்கம்: புற்றிலிருந்து உணவு தேடக் கிளம்பும் எறும்புகள் செல்லும்
என கண்டனர். சில சமயம் நேருக்குநேர் எறும்புகள் மோதிக் கொண்டன. அப்போது உடனே சுதாரித்து, பின்னால் வரும் எறும்புகளுக்கு இடையூறின்றி முன்னே சென்றன அல்லது வழிவிட்டு விலகி நின்றன என கண்டனர்.
2. விவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்?
வி.கிஃப்டா கிரேஸ், 11ஆம் வகுப்பு, மைக்கேல் மெட்ரிக். பள்ளி, மதுரை.
மீத்தேன் (CH4) ஒரு கார்பன் அணுவையும், நான்கு ஹைட்ரஜன் அணுக்களையும் கொண்ட சேர்மம். இது எரிவாயு மற்றும் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இயற்கையில் வாயு நிலையில் காணப்படும் இந்தச் சேர்மம், காற்றுடன் கலந்து நன்கு எரியக்கூடியது. தாவரக்கழிவுகள், நீர் நிறைந்த இடங்கள், எரிமலைகள், கடலின் அடிப்பகுதி வெடிப்புகள், கண்டங்கள் இணையும் இடங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள் என, பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது.
மாட்டுச் சாணம் தவிர, மக்கிய தாவரக் குப்பைகளும் மீத்தேன் வாயுவை வெளியிடும். விவசாய நிலத்தில் நீரை நிரப்பி, நெல் சாகுபடி செய்தால் அந்த விவசாய நிலத்தில் இருந்தும் மீத்தேன் வெளிவரும். நகரங்களில் சேரும் கழிவுகள் மக்கும்போதும், மீத்தேன் வெளிவரும். இவை தவிர, உலகின் பல இடங்களில் பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் வாயு நிலக்கரி போல பொதிந்துள்ளது.
3. தசை நினைவு (Muscle Memory) என்றால் என்ன?
கே.சக்திவேல், பிரின்ஸ் டாக்டர் கே.வாசுதேவன் பொறியியல் கல்லூரி, சென்னை.
'தசை நினைவு' என்பது இரண்டு வகையில் பொருள் கொள்ளப்படுகிறது.
நியூரோ அறிவியலின்படி, ஓர் இயக்கத்தை நாம் தொடர்ந்து செய்யும்போது அது பழக்கமாகிவிடும். உதாரணமாக, சைக்கிள் ஓட்டக் கற்கும்போது மிகவும் சுயநினைவோடு கைகள் வேறு எந்தப் பக்கமும் திரும்பாமல் நேராகப் பிடித்துச் செலுத்துவோம். ஓரளவு கற்றுக் கொண்டதும், நினைவுகள் வேறு எங்கு இருந்தாலும் நம்மால் சரியாக சைக்கிளை ஓட்ட முடியும். அதாவது பழக்கம் காரணமாக ஏற்படும் இத்தகைய நினைவாற்றலை சில சமயம் தசை நினைவு என்பார்கள்.
உடலியல்படி, பளு தூக்கும் உடற்பயிற்சியில், முதலில் கடுமையாக இருக்கும் பளு, நாளடைவில் வெகு எளிதாகத் தூக்குவது போல் எளிதாகிவிடும். பளு தூக்க உதவும் தசைப் பகுதிகளில், புதிய தசை நார்கள் உருவாகி வலுப்பெறுகிறது. இத்தகைய உடலியல் மாற்றத்தையும் தசை நினைவு என்பார்கள்.
4. 4D பரிமாணம் எப்படி இருக்கும்?
பி.நரேன் கார்த்திக், அருள்மலர் மெட்ரிக். பள்ளி, மதுரை.
நாம் வாழும் வெளி, முப்பரிமாணம் கொண்டது. எனவே, எளிதில் 4D (4 Dimension) பரிமாணத்தைக் கற்பனை செய்தல் எளிதல்ல. ஓவியம் அல்லது புகைப்படம் நீளம், அகலம் என, இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. ஓவியத்தில் வீடு மூன்று பரிமாணங்களைக் கொண்டது போன்ற காட்சி மயக்கத்தைத் தருகிறது. ஓவியத்துக்கு நீளம், அகலம் என்ற இரண்டு பரிமாணங்கள் மட்டுமே உண்டு. நீள, அகல, உயரம் என சிலை என்பது, முப்பரிமாணம். மேடையில் ஒருவர் ஆடும் நடன நிகழ்ச்சியைப் பாருங்கள். ஒவ்வொரு கணமும் அவர் ஆடும் இடம் மாறுகிறது. மேடையில் உள்ள அமைப்பும் மாறிக்கொண்டே இருக்கிறது. இதை நான்காவது பரிமாணம் என கொள்ளலாம்.
நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்று பரிமாணங்களுடன் நேரம் என்ற பரிமாணத்தையும் சேர்த்துக் கொள்வதே நான்காவது பரிமாணம். மேடையில் ஆடிக் கொண்டிருப்பவரின் சரியான/நிலையான இருப்பிடத்தைக் காணவே நான்காவது பரிமாணம் தேவைப்படுகிறது. மேடையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் எப்போது அவர் ஆடினார் என்பதைக் கூறலாம்.
