PUBLISHED ON : அக் 01, 2018

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
நத்தைக்குக் கால்கள் இல்லை. ஆனால் அவை எப்படி நகர்கின்றன?
ர.சந்துரு. 5ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.
எல்லா உயிரினங்களைப் போலவே நத்தையிலும் பல இனங்கள் உண்டு. அவை நிலத்தில் மட்டுமன்றி குளம், குட்டை, ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளிலும் வாழ்கின்றன. எலும்புகள் இல்லாத உயிரினங்களுள் இதுவும் ஒன்று. இவற்றுக்குக் கால்கள் இல்லை என்றாலும், அதன் அடிப்பாகம் முழுவதும் தட்டையான பாதம்போல செயற்படும். வயிற்றுப்பகுதியை உந்தித் தள்ளி ஊர்ந்து செல்லும். இதற்கு வழவழப்பான சளி போன்ற பிசின் உதவுகிறது.
மிகவும் மெதுவாகச் செல்லும் வகையில் இருக்கிற நத்தைகள், சராசரியாக நொடிக்கு ஒரு மில்லி மீட்டர் வேகத்தில் மட்டுமே நகர்ந்து செல்லும். உடலிலேயே வீடும் உள்ளதால், உணவைத் தேடுவது மட்டுமே அதன் வேலை. நத்தை அதனுடைய உடல் எடையைவிட 10 மடங்கு பொருட்களைத் தூக்கிச் செல்லும் ஆற்றல் கொண்டது.
கண்ணாடியின் பிரதிபலிப்புச் செயல் எவ்வாறு நடைபெறுகிறது?
கோகுலராமன், 8ஆம் வகுப்பு, ஸ்ரீ ஆர்.எம். ஜெயின் வித்யாபீடம் பள்ளி, திருவள்ளூர்.
அனைத்துப் பொருட்களுமே, நுண்ணிய மூலக்கூறுகள் அடங்கிய தொகுப்புதான். பொருட்களின் மீது ஒளி விழும்போது, அலைநீளத்தைப் பொறுத்து, மூன்று வகையில் வினை ஏற்படலாம். ஒளியின் அலைநீளம் சார்ந்து நுண்ணிய துகள்களை கூடுதல் அலைவு வீச்சில் (amplitude) அதிர்வு கொள்ளச் செய்யலாம். அந்தச் சமயத்தில், ஒளியை அந்தப் பொருள் முற்றிலும் உட்கொண்டுவிடும். அதனை ஒளி ஊடுருவாப் பொருள் என்போம்.
சிலசமயம் அந்தப் பொருளின் நுண்ணிய துகளில் குறைவான அலைவு வீச்சு ஏற்படும். அப்போது, ஓர் மூலக்கூறு அடுத்த துகளுக்கு அந்த அதிர்வைக் கடத்திவிட, அந்தப் பொருளின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அதிர்வு கடந்து சென்று வெளிப்படும். அதாவது ஒளி ஊடுருவிச் செல்லும்.
கண்ணாடியிலும் இவ்வாறே ஒளி ஊடுருவிச் செல்கிறது. மேற்புற நுண்துகள் மட்டும் ஒளியின் தூண்டுதலால் பொருளின் உள்நோக்கிச் செல்லாமல், வந்த அதே திசையில் வெளிப்படும். இதுவே பிரதிபலிப்பு என்கிறோம்.
ஒளியின் அலைநீளம், பொருளின் தன்மையைப் பொறுத்து இந்தப் பிரதிபலிப்பு வினை ஏற்படுகிறது. தூய கண்ணாடி, ஒளியைக் கடத்தும்; கண்ணாடியின் ஒரு புறத்தில் அலுமினியம் அல்லது வெள்ளிப் பூச்சு போன்ற பொருளைப் பூசும்போது, கண்ணாடியின் ஊடே உள்வரும் ஒளி, இந்தப் பூச்சில் பிரதிபலித்து வெளிப்படும். இதுவே, முகம் பார்க்கும் கண்ணாடி.
கழுகு மட்டும் உயரமாகப் பறப்பதற்கான தேவை என்ன? இறக்கையை அதிகம் அசைக்காமல் எவ்வாறு பறக்கிறது?
ம. பிரவீன்குமார், 5ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.
காலால் மிதித்துச் சைக்கிள் ஓட்டாமல், ஓடும் பஸ்சின் பின்புற ஏணியையோ அல்லது வேறு ஏதாவது வாகனத்தையோ பிடித்து வேகமாகச் சைக்கிள் செலுத்தும் சாகசங்களை நாம் பார்த்திருப்போம். அதுபோல கழுகும் தனது ஆற்றலைப் பயன்படுத்தி இறக்கையை அசைத்து மேலே எழும்பாமல் வீசும் காற்று, வெப்பச் சலனம் முதலியவற்றைப் பயன்படுத்தி உயரே எழுகிறது.
எடுத்துக்காட்டாக, மலைத்தொடருக்கு சற்றேறக்குறைய செங்குத்து திசையில் காற்று வீசும்போது, வீசும் காற்றில் மிதந்து கழுகு உயரே எழும்பிப் பறக்கிறது. சில சமயம் சூரிய ஒளியில் தரை வெப்பமடைந்து வெப்பக்காற்றுக் குமிழிகள் உருவாகும். இந்தக் குமிழியில் உள்ள காற்றின் அடர்த்தி குறைவு என்பதால் பலூன் போல மேலே எழும். இந்த வெப்பக்காற்று குமிழிகளைப் பயன்படுத்தியும் சில சமயம் கழுகு உயரே பறக்கும். எவ்வளவு உயரத்தில் கழுகு பறக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் இரைதேடும் பரப்பும் விரியுமல்லவா?
தண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா?
ஜெ.லட்சுமிதேவிப்ரியா, சாத்தூர்.
பாத்திரங்கள் கழுவ நீர்தான் பரவலாகப் பயன்படுகிறது என்றாலும், பல்வேறு திரவங்கள் சுத்தம் செய்யப் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வாகனங்களின் கார்பரேட்டரை (carburator) சுத்தம் செய்ய பெட்ரோல் பயன்படுவதைப் பார்த்திருக்கலாம்.
பாத்திரம் கழுவுதல் என்பது ஒருவகைச் சுத்தம் செய்யும் செயலே. தண்ணீரை மட்டுமே உணவுக்காகப் பயன்படுத்துகிறோம் என்பதாலேயே அதைப் பயன்படுத்தி சுத்தம் செய்கிறோம். நுண்ணுயிரிகளை நீக்குதல், மாசு நீக்குதல், கறைகளை நீக்கி அழகு படுத்துதல், துர்நாற்றத்தை நீக்குதல் போன்ற பல செயல்கள் இதன்மூலம் நடைபெறுகின்றன. செம்பு பாத்திரங்களில் படியும் ஆக்சைடுகளை நீக்க புளி கரைசலையும், கொழுப்பு எண்ணெய்ப் பொருட்களை நீக்க கரிமக் கரைப்பான்களையும் பயன்படுத்துகிறோம்.
