PUBLISHED ON : அக் 21, 2019

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. பூமராங் கருவியை எறிந்த பின்னும் எப்படி எறிந்தவர் கைகளுக்கே மீண்டும் திரும்பி வருகிறது?
ஏ.ஆர். தூக்குதுரை, அரசு மேல்நிலைப் பள்ளி, கொடுவிலார்பட்டி, தேனி.
வேகவேகமாகச் சுழலும்படி பம்பரத்தைச் சுற்றவிட்டால், நேராகச் செங்குத்தாகச் சுற்றும். லேசாக அதன் தலையைத் தட்டினாலும் சாய்ந்து கீழே விழாமல் அதன் அச்சில் அப்படியே சுழலும். அதன் குடுமியும் வட்டமாகச் சுற்றும். இதே இயற்பியல் தத்துவமே பூமராங் கருவி வட்டமடித்து எறிந்தவர் கைக்குத் திரும்பி வருவதற்கும் காரணம்.
ஆகாய விமானத்தின் இறக்கை வடிவில் பூமராங் கருவி இருக்கும். எனவே, காற்றில் பெர்னோலி தேற்றத்தின் அடிப்படையில் பறக்கும். பம்பரம் தலையை ஆட்டிச் சுழல்வதற்கும் பூமராங் திரும்புவதற்கும் பின்னே உள்ள தத்துவத்துக்குச் சுழல் முந்துகை (Gyroscopic precession) என்று பெயர்.
ஓடிக்கொண்டிருக்கும் பேருந்து, திடீரென பிரேக் பிடிக்கும்போது, நாம் முன்னே செல்வது, நியூட்டனின் முதல் விதியென நாம் அறிவோம். நேர்கோட்டில் செல்லும் பொருட்களின் இயக்கம், அதே நேர்கோட்டில் அமையும். சுழலும் பொருட்களுக்கு அதன் சுழல் அச்சைச் சார்ந்து சுழல் முந்துகை அமையும். எனவே தான், வேகவேகமாகச் சுழலும் பம்பரத்தின் தலையைச் சற்றே ஆட்டிவிட்டாலும், கீழே விழாமல் சுழல்கிறது.
பூமராங் கருவியைப் பம்பரத்தின் தலைப்பகுதியாகக் கொள்க. சுழல் முந்துகைத் தத்துவத்தின் அடிப்படையில், பம்பர அச்சு வட்டமிடுவது போல, பூமராங் கருவி வட்டமடித்து எறிந்தவர் கையில் வந்து சேர்கிறது.
பூமராங் கருவியைப் பக்குவமாக வீசினால் மட்டுமே எறிந்தவர் கைக்கு வந்துசேரும். இதே தத்துவத்தின் அடிப்படையில் தான் விண்வெளியில் விண்கலங்கள் தமது திசைகளை உணர்ந்து கொள்கின்றன!
பூமராங் கருவி, ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் உபயோகித்த ஒரு வகை ஆயுதம். பண்டைய தமிழரால் பூமராங் போல, 'வளரி' எனும் பெயரில் திருடர்களைப் பிடிக்கப் பயன்பட்ட கருவி பற்றி சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
2. பெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்?
எஸ்.சக்திவேல், திருப்பூர்.
மாத்திரை என்பது முழுவதும் மருந்து அல்ல. சிறு அளவு மருந்தை விழுங்க வசதியாக அதில் மாவுப் பொருளைக் கலந்து தயார் செய்கிறார்கள். எனவே, மருந்தின் நிறம் மங்கி, அதில் கலக்கப்படும் பொருட்களின் நிறமான வெள்ளை அதிகமாகத் தெரியும். எனினும், பல சமயங்களில் மாத்திரைகளை வித்தியாசமாகக் காட்ட செயற்கை நிறமிகளைச் சேர்ப்பதுண்டு. எனவேதான், வெள்ளை தவிர பல்வேறு நிறங்களிலும் மாத்திரைகள் உள்ளன. எந்த நிறத்தில் இருந்தாலும், பெரும்பாலும் அதில் உள்ள மருந்தின் நிறமாக மாத்திரையின் நிறம் இருப்பதில்லை.
3. கருப்பு நிறம் ஏன் சூரியஒளியை அதிகம் உள்வாங்குகிறது?
ஆகாஷ், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
'செடியின் இலை பசுமையாகக் காட்சி தருவதற்குக் காரணம், சூரியஒளியில் உள்ள பல்வேறு நிறங்கள்' என்பதை நாம் நிறப்பிரிகை பரிசோதனை மூலமாக அறிந்திருப்போம். பல நிறங்களைக் கொண்ட சூரியஒளி, இலையில் படும்போது பச்சை நிறம் தவிர மற்ற நிறங்களை இலை உறிஞ்சிவிடுகிறது.
பச்சை நிறத்தை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை. எனவேதான், இலை பச்சை நிறத்தில் காட்சி தருகிறது. எல்லா நிறங்களையும் முற்றிலும் உறிஞ்சிக்கொள்வது தான் கருப்பு. எனவே, கருமைப் பொருட்கள் சூரியஒளியை சற்றேறக்குறைய முற்றிலுமாக உள்வாங்கி விடும்.
4. பாம்பு கடித்தவுடன் வாயில் நுரை வருகிறது. கடிபட்டவரின் உடலும் நீல நிறத்தில் மாறுவதன் காரணம் என்ன?
மோ.செந்தமிழ்ச்செல்வன், 11ஆம் வகுப்பு, வி.எஸ்.மெட்ரிக் பள்ளி, திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம்.
சினிமாவில் காட்டப்படுவது போல வாயில் நுரை தள்ளாது. ஆனால், நாகப்பாம்பு, கட்டுவிரியன் போன்ற பாம்புகளின் நச்சு, நரம்புகளைச் செயலிழக்கச் செய்துவிடும். அதனால், வாயில் எப்போதும் சுரக்கும் எச்சிலை சரியாக விழுங்க முடியாமல் போகும். அந்த எச்சில்தான் வாயிலிருந்து வெளியே வருகிறது. அதுதான் நுரை வருவது போல காட்சி தரும்.
வாயில் நுரை வருவது போல் தெரிந்தால், கடித்த பாம்பு, கட்டுவிரியன் போல நச்சுக்கொண்ட பாம்பு என்பதை மருத்துவர் தெரிந்துகொள்ள முடியும். கண்ணாடி விரியன் போன்ற பாம்புகளின் நஞ்சு, இரத்தத்தைச் சிதைக்கும் விஷத்தன்மை கொண்டது. இரத்த செல்கள் நசிந்தால் உடலின் சில பகுதிக்குத் தேவையான ஆக்சிஜன் சென்று சேராது. ஆக்சிஜன் குறைவான இரத்தமே நீல நிறத்தில் காணப்படும். அதுவே, தோலின் அடியில் நீல நிறச் சாயலையும் ஏற்படுத்தும்.
